பத்தாம்-திருமுறை

6ம் தந்திரம் - 02. திருவடிப் பேறு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே

பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்

சிவந்த குருவந்து சென்னிகை வைக்க

உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே.  1 

 

 

தாடந்த போதே தலைதந்த எம்மிறை

வாள்தந்த ஞான வலியையுந் தந்திட்டு

வீடந்த மின்றியே யாள்கென விட்டருட்

பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.  2 

 

 

தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு

ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின

ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்னந்தி

தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.  3 

 

 

உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்

திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்

கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த

சொரூபத் திருத்தனன் சொல்லிறந் தோமே.  4 

 

 

குரவன் உயிர்முச் சொரூபமுங் கைக்கொண்

டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு

பெரிய பிரானடி நந்தி பேச்சற்

றுருகிட என்னையங் குய்யக்கொண் டானே.  5 

 

 

பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே

மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்

காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு

வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.  6 

 

 

இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்

பதிவித்த பாதப் பராபரன் நந்தி

கதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும்

விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே.  7 

 

 

திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப்

பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்

குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்

கருவழி வற்றிடக் கண்டுகொண் டேனே.  8 

 

 

திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்

திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்

திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்

திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.  9 

 

 

மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை

மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்

பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்

தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.  10 

 

 

கழலார் கமலத் திருவடி என்னும்

நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா

அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானுங்

குழல்சேரும் என்னுயிர்க் கூடுங் குலைத்ததே.  11 

 

 

முடிமன்ன ராகிமூ வுலகம தாள்வர்

அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்

முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன்

குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.  12 

 

 

வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்

பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்

எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு

மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே.  13 

 

 

அடிசார லாம்அண்ண ல்பாத மிரண்டும்

முடிசார வைத்தனர் முன்னை முனிவர்

படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்

குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.  14 

 

 

மந்திரமாவதும் மாமருந் தாவதுந்

தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்

சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்

எந்தை பிரான்தன் இணையடி தானே.  15 

 

திருச்சிற்றம்பலம்