பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 09. சன்மார்க்கம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத்

தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு

சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்

கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.  1 

 

 

சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி

உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு

தெய்வச் சிவநெறி நன்மார்க்கஞ் சேர்ந்துய்ய

வையத்துள் ளார்க்கு வகுத்தவைத் தானே.  2 

 

 

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்

பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்

குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத்

தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே.  3 

 

 

தெளிவறி யாதார் சிவனை யறியார்

தெளிவறி யாதார் சீவனு மாகார்

தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்

தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.  4 

 

 

தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று

மோனம தாம்மொழிப் பான்முத்த ராவது

மீனமில் ஞானானு பூதியில் இன்பமுந்

தானவ னாயுறலானசன் மார்க்கமே.  5 

 

 

சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ்

சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ்

சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம்

எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.  6 

 

 

சன்மார்க்க சாதனந் தான்ஞான ஞேயமாம்

பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய்நிற்கும்

துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்

சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே.  7 

 

 

சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப்

பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால்

நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே

சொன்மார்க்க மென்னச்சுருதிகைக்கொள்ளுமே.  8 

 

 

அன்னிய பாசமும் ஆகுங் கருமமும்

முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்

பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந்

தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.  9 

 

 

பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிப்

கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்

தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்

றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே.  10 

 

 

மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது

மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை

மார்க்கஞ்சன் மார்க்க மெனுநெறி வைகாதோர்

மார்க்கஞ்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே.  11 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சுந்தரநாதனுக்கு பொற்கிழி கிடைக்கச் செய்தல்
View Details
வேதப் பொருளுரைத்தல்
View Details
கரிக்குருவிக்கு உபதேசம் செய்தல்
View Details