பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 05. பிராணாயாமம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்

உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு

மெய்யர்க்குப்பற்றுக்கொடுக்குங் கொடாதுபோய்ப்

பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே  1 

 

 

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள

வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை

கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்

வாரிப் பிடிக்க வசப்படுந் தானே  2 

 

 

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்

கள்ளுண்ண வேண்டாந் தானே களிதருந்

துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்

உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே  3 

 

 

பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்

பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை

பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்

பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே  4 

 

 

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்

ஆறுதல் 1கும்பம் அறுபத்து நாலதில்

ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்

மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே  5 

 

 

வளியினை வாங்கி 1வயத்தில் அடக்கில்

பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்

தெளியக் குருவின் திருவருள் பெற்றால்

வளியினும் வெட்ட வெளியனு மாமே  6 

 

 

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே

அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை

அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்

சங்கே குறிக்கத் தலைவனு மாமே  7 

 

 

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்

கூற்றை யுதைக்குங் குறியது வாமே  8 

 

 

மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்

பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து

மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே

ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே  9 

 

 

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே

ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்

காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்

டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே  10 

 

 

இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப்

புட்டிப் படத்தச நாடியும் பூரித்துக்

கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து

நட்டம் இருக்க நமனில்லை தானே. 11 

 

 

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை

நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்

உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்

புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே  12 

 

 

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்

ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்

நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்

கூடிக் கொளிற்கோல அஞ்செழுத் தாமே  13 

 

 

பன்னிரண் டானை பகலஇர வுள்ளது

பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்

பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்

பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே 14

 

 

திருச்சிற்றம்பலம்