பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 24. கள்ளுண்ணாமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா

கழுநீர் விடாய்த்துத்தம் காயம்சுருக்கும்

முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்

செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே.  1 

 

 

சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்

ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்

சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா

நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே.  2 

 

 

காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்

மாமல மும்சம யத்துள் மயலுறும்

போமதி யாகும் புனிதன் இணையடி

ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.  3 

 

 

வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்

காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்

ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்

நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.  4 

 

 

உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்

வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்

தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்

கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.  5 

 

 

மயக்கும் சமய மலமன்னு மூடர்

மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேறார்

மயக்குறு மாமாயை மாயையின் வீடு

மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.  6 

 

 

மயங்குந் தியங்கும் கள்வாய்மை அழிக்கும்

இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி

முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்

இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.  7 

 

 

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து

பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்

இராப்பகல் அற்ற இணையடி இன்பத்து

இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.  8 

 

 

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்

சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்

சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்

சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.  9 

 

 

சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம்

சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம்

சத்தி சிவமாம் இரண்டும் தன் உள்வைக்கச்

சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே.  10 

 

 

தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாக்கிப்

பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே

மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்

சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.  11 

 

 

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்

போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி

மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று

ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே.  12 

 

 

உண்ணீர் அமுத முறும் ஊறலைத்திறந்து

எண்ணீர் குரவன் இணையடித் தாமரை

நண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம்

கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே. 13

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

அன்னக்குழி, வைகை அழைத்தல்
View Details
வணிகர் சிறுவனுக்காக வழக்காடுதல்
View Details
மூர்த்தி நாயனார்
View Details