பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 17. அறஞ்செயான் திறம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன

ஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்

வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்

பட்டிப் பதகர் பயன்அறி யாரே.  1 

 

 

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின

கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்

பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை

அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.  2 

 

 

அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்

திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்

புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு

மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.  3 

 

 

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்

தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்

உருமிடி நாகம் உரோணி கழலை

தருமம்செய் வார்பக்கல் சாரகி லாவே.  4 

 

 

பரவப் படுவான் பரமனை ஏத்தீர்

இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயீர்

கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்

நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே.  5 

 

 

வழிநடப் பாரின்றி வானோர் உலகம்

கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும்

மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு

வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.  6 

 

 

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்

துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்

மலிந்தவர் மாளும் துணையும்ஒன் றின்றி

மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே.  7 

 

 

இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது

முன்பவர் செய்கையி னாலே முடிந்தது

இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்

அன்பிலார் சிந்தை அறமறி யாரே.  8 

 

 

கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்

நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்

இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்

படுவது செய்யின் பசுவது வாமே.  9 

 

 

செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்

புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்

இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்

வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.  10 

 

திருச்சிற்றம்பலம்