பத்தாம்-திருமுறை

01 பாயிரம் - 09. மும்மூர்த்திகளின் முறைமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்

அளவியல் காலமும் நாலும் உணரில்

தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்

அளவில் பெருமை அரியயற் காமே.  1 

 

 

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்

ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்

சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்

பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.  2 

 

 

ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்

பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது

ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்

தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.  3 

 

 

சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த

அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்

அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்

சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.  4 

 

 

பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்

அயனொடு மால்நமக்கு அன்னியம் இல்லை

நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்

வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே.  5 

 

 

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்

பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ

மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ

ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே.  6 

 

 

வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்

தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது

தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை

ஊனமர்ந் தோரை உணர்வது தானே.  7 

 

 

சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற

ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்

நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று

பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.  8 

 

 

பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகி

வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்

தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்

கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.  9 

 

 

தானொரு கூறு சதாசிவன் எம்மிறை

வானொரு கூறு மருவியும் அங்குளான்

கோனொரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற

தானொரு கூறு சலமய னாமே. 10

 

 

திருச்சிற்றம்பலம்