ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

025 கோல மலர்நெடுங்கண்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

கோல மலர்நெடுங்கண் கொவ்வை 

  வாய்க்கொடி ஏரிடையீர்

பாலினை இன்னமுதைப் 

  பரமாய பரஞ்சுடரைச்

சேலுக ளும்வயல்சூழ் தில்லை 

  மாநகர்ச் சிற்றம்பலத்(து)

ஏலவுடை எம்இறையை 

  என்றுகொல் காண்பதுவே.  1 

 

 

காண்பதி யான் என்றுகொல் 

  கதிர்மாமணி யைக்கனலை

ஆண்பெண் அருவுருவென்(று) 

  அறிதற்கு அரி தாயவனைச்

சேண்பணை மாளிகைசூழ் 

  தில்லைமாநகர்ச் சிற்றம்பலம்

மாண்புடை மாநடஞ்செய் மறையோன் 

  மலர்ப் பாதங்களே.  2 

 

 

கள்ளவிழ் தாமரைமேல் 

  கண்டயனொடு மால்பணிய

ஒள்ளெரி யின்நடுவே உருவாய்ப்பரந் 

  தோங்கிய சீர்த்

தெள்ளிய தண்பொழில்சூழ் 

  தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்

துள்ளெரி யாடுகின்ற 

  ஒருவனை உணர்வரிதே.  3 

 

 

அரிவையோர் கூறுகந்தான் அழகன் 

  எழில் மால்கரியின்

உரிவைநல் உத்தரியம் 

  உகந்தானும் பரார்தம்பிரான்

புரிபவர்க்(கு) இன்னருள்செய் 

  புலியூர்த்திருச் சிற்றம்பலத்(து)

எரிமகிழ்ந் தாடுகின்ற 

  எம்பிரான்என் இறையவனே.  4 

 

 

இறைவனை என்கதியை 

  என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற

மறைவனை மண்ணும் விண்ணும் 

  மலிவான் சுடராய் மலிந்த

சிறையணி வண்டறையும் தில்லை 

  மாநகர்ச் சிற்றம்பலம்

நிறையணி யாம் இறையை 

  நினைத்தேன் இனிப் போக்குவனே.  5 

 

 

நினைத்தேன் இனிப்போக்குவனோ நிமலத் 

  திரளை நினைப்பார்

மனத்தி னுளேயிருந்த 

  மணியைமணி மாணிக்கத்தைக்

கனைத்திழி யுங்கழனிக் 

  கனகங்கதிர் ஒண்பவளம்

சினத்தோடு வந்தெறியும் 

  தில்லைமாநகர்க் கூத்தனையே.  6 

 

 

கூத்தனை வானவர்தம் கொழுந்தைக் 

  கொழுந்தாய் எழுந்த

மூத்தனை மூவுருவின் 

  முதலைமுத லாகிநின்ற

ஆத்தனைத் தான்படுக்கும் அந்தணர் 

  தில்லை அம்பலத்துள்

ஏத்தநின் றாடுகின்ற 

  எம்பிரானடி சேர்வன்கொலோ  7 

 

 

சேர்வன்கொலோ அன்னைமீர் 

  திகழும்மலர்ப் பாதங்களை

ஆர்வங்கொளத் தழுவி அணிநீ(று) 

  என் முலைக்கணியச்

சீர்வங்கம் வந்தணவும் 

  தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)

ஏர்வங்கை மான்மறியன் எம்பிரான் 

  என்பால் நேசனையே.  8 

 

 

நேசமு டையவர்கள் நெஞ்சுளே 

  யிடங்கொண் டிருந்த

காய்சின மால்விடையூர் 

  கண்ணுதலைக் காமருசீர்த்

தேசமிகு புகழோர் 

  தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)

ஈசனை எவ்வுயிர்க்கும் 

  எம்மிறைவன்என்(று) ஏத்துவனே.  9 

 

 

இறைவனை ஏத்துகின்ற 

  இளையாள்மொழி இன்றமிழால்

மறைவல நாவலர்கள் 

  மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை

அறைசெந்நெல் வான்கரும்பின் 

  அணியாலைகள் சூழ்மயிலை

மறைவல ஆலிசொல்லை 

  மகிழ்ந்தேத்துக வானெளிதே.  10 

 

திருச்சிற்றம்பலம்