ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

015 பெரியவா கருணை

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : சாட்டியக்குடி

திருச்சிற்றம்பலம்

 

பெரியவா கருணை இளநிலா எறிக்கும்

  பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்து

சரியுமா சுழியங் குழைமிளிர்ந்து இருபால்

  தாழ்ந்தவா காதுகள் கண்டம்

கரியவா தாமும் செய்யவாய் முறுவல்

  காட்டுமா சாட்டியக் குடியார்

இருகைகூம் பினகண்(டு) அலர்ந்தவா முகம்ஏழ்

  இருக்கையில் இருந்தஈ சனுக்கே.  1 

 

 

பாந்தள்பூ ணாரம் பரிகலம் கபாலம்

  பட்டவர்த் தனம்எரு(து) அன்பர்

வார்ந்தகண் அருவி மஞ்சன சாலை

  மலைமகள் மகிழ்பெரும் தேவி

சாந்தமும் திருநீ(று) அருமறை கீதம்

  சடைமுடி சாட்டியக் குடியார்

ஏந்தெழில் இதயம் கோயில்மாளிகைஏழ்

  இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.  2 

 

 

தொழுதுபின் செல்வ(து) அயன்முதற் கூட்டம்

  தொடர்வன மறைகள்நான் கெனினும்

கழுதுறு கரிகா(டு) உறைவிடம் போர்வை

  கவந்திகை கரியுரி திரிந்தூண்

தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு

  செபவடம் சாட்டியக் குடியார்

இழுதுநெய் சொரிந்தோம்(பு) அழலொளி விளக்கேழ்

  இருக்கையில் இருந்த ஈசனுக்கே.  3 

 

 

பதிகநான் மறைதும் புருவும்நா ரதரும்

  பரிவொடு பாடுகாந் தர்ப்பர்

கதியெலாம் அரங்கம் பிணையல் மூவுலகில்

  கடியிருள் திருநடம் புரியும்

சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில்

  தமருகம் சாட்டியக் குடியார்

இதயமாம் கமலம் கமலவர்த் தனைஏழ்

  இருக்கையில் இருந்தஈ சனுக்கே.  4 

 

 

திருமகன் முருகன் தேவியேல் உமையாள்

  திருமகள் மருமகன் தாயாம்

மருமகன் மதனன் மாமனேல் இமவான்

  மலையுடை அரையர்தம் பாவை

தருமலி வளனாம் சிவபுரன் தோழன்

  தனபதி சாட்டியக் குடியார்

இருமுகம் கழல்முன்று ஏழுகைத் தலம்ஏழ்

  இருக்கையில் இருந்தஈ சனுக்கே.  5 

 

 

அனலமே ! புனலே ! அனிலமே ! புவனி

  அம்பரா ! அம்பரத்(து) அளிக்கும்

கனகமே ! வெள்ளிக் குன்றமே என்றன்

  களைகணே, களைகண்மற் றில்லாத்

தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும்

  சைவனே சாட்டியக் குடியார்க்(கு)

இனியதீங் கனியாய் ஒழிவற நிறைந்துஏழ்

  இருக்கையில் இருந்தவா(று) இயல்பே.  6 

 

 

செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற

  திசைமுகன் மால்முதற் கூட்டத்து

அன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே !

  அத்தனே பித்தனே னுடைய

சம்புவே அணுவே தாணுவே சிவனே !

  சங்கரா சாட்டியக் குடியார்க்(கு)

இன்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ்

  இருக்கையில் இருந்தவா(று) இயம்பே.  7 

 

 

செங்கணா போற்றி ! திசைமுகா போற்றி !

  சிவபுர நகருள்வீற் றிருந்த

அங்கணா போற்றி ! அமரனே போற்றி !

  அமரர்கள் தலைவனே போற்றி !

தங்கள்நான் மறைநூல் சகலமும் கற்றோர்

  சாட்டியக் குடியிருந் தருளும்

எங்கள்நா யகனே போற்றி ! ஏழ் இருக்கை

  இறைவனே ! போற்றியே போற்றி !  8 

 

 

சித்தனே ! அருளாய் ! செங்கணா ! அருளாய் !

  சிவபுர நகருள்வீற் றிருந்த

அத்தனே ! அருளாய் ! அமரனே ! அருளாய் !

  அமரர்கள் அதிபனே ! அருளாய்

தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்

  சாட்டியக் குடியுள்ஏழ் இருக்கை

முத்தனே ! அருளாய் ! முதல்வனே ! அருளாய் !

  முன்னவா துயர்கெடுத்(து) எனக்கே.  9 

 

 

தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்

  தண்டலைச் சாட்டியக் குடியார்

ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏழ் இருக்கை

  இருந்தவன் திருவடி மலர்மேல்

காட்டிய பொருட்கலை பயில்கரு ஊரன்

  கழறுசொல் மாலைஈர் ஐந்தும்

மாட்டிய சிந்தை மைந்தருக்(கு) அன்றே

  வளரொளி விளங்குவா னுலகே. 10

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சப்தகந்தலிங்க சித்தர்
View Details
நூல்களின் ஏற்ற தாழ்வு கண்டறிதல்
View Details
திருக்கோயிலூர் ஜடாமுடித் தம்பிரான் சித்தர்
View Details