ஏழாம்-திருமுறை

080 நத்தார்புடை ஞானம்பசு

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : கேதீச்சுரம்

திருச்சிற்றம்பலம்

 

நத்தார்புடை ஞானன்பசு

  ஏறிந்நனை கவுள்வாய்

மத்தம்மத யானைஉரி

  போர்த்தமழு வாளன்

பத்தாகிய தொண்டர்தொழு

  பாலாவியின் கரைமேற்

செத்தாரெலும் பணிவான்றிருக்

  கேதீச்சரத் தானே.  1 

 

 

சுடுவார்பொடி நீறுந்நல

  துண்டப்பிறைக் கீளுங்

கடமார்களி யானைஉரி

  அணிந்தகறைக் கண்டன்

படவேரிடை மடவாளொடு

  பாலாவியின் கரைமேற்

திடமாஉறை கின்றான்றிருக்

  கேதீச்சரத் தானே.  2 

 

 

அங்கம்மொழி அன்னாரவர்

  அமரர்தொழு தேத்த

வங்கம்மலி கின்றகடல்

  மாதோட்டநன் னகரில் 

பங்கஞ்செய்த பிறைசூடினன்

  பாலாவியின் கரைமேற்

செங்கண்ணர வசைத்தான்றிருக்

  கேதீச்சரத் தானே.  3 

 

 

கரியகறைக் கண்டன்நல

  கண்மேலொரு கண்ணான்

வரியசிறை வண்டியாழ்செயும்

  மாதோட்டநன் னகருட்

பரியதிரை எறியாவரு

  பாலாவியின் கரைமேல் 

தெரியும்மறை வல்லான்றிருக்

  கேதீச்சரத் தானே.  4 

 

 

அங்கத்துறு நோய்களடி

  யார்மேலொழித் தருளி

வங்கம்மலி கின்றகடல்

  மாதோட்டநன் னகரிற்

பங்கஞ்செய்த மடவாளொடு

  பாலாவியின் கரைமேற்

தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக்

  கேதீச்சரத் தானே.  5 

 

 

வெய்யவினை யாயஅடி

  யார்மேலொழித் தருளி

வையம்மலி கின்றகடல்

  மாதோட்டநன் னகரிற்

பையேரிடை மடவாளொடு

  பாலாவியின் கரைமேற்

செய்யசடை முடியான்றிருக்

  கேதீச்சரத் தானே.  6 

 

 

ஊனத்துறு நோய்களடி

  யார்மேலொழித் தருளி

வானத்துறு மலியுங்கடல்

  மாதோட்டநன் னகரிற்

பானத்துறும் மொழியாளொடு

  பாலாவியின் கரைமேல்

ஏனத்தெயி றணிந்தான்றிருக்

  கேதீச்சரத் தானே.  7 

 

 

அட்டன்னழ காகவரை

  தன்மேலர வார்த்து

மட்டுண்டுவண் டாலும்பொழில்

  மாதோட்டநன் னகரிற்

பட்டவரி நுதலாளொடு

  பாலாவியின் கரைமேற்

சிட்டன்நமை யாள்வான்றிருக்

  கேதீச்சரத் தானே.  8 

 

 

மூவரென இருவரென

  முக்கண்ணுடை மூர்த்தி

மாவின்கனி தூங்கும்பொழில்

  மாதோட்டநன் னகரிற்

பாவம்வினை யறுப்பார்பயில்

  பாலாவியின் கரைமேல்

தேவன்னெனை ஆள்வான்றிருக்

  கேதீச்சரத் தானே.  9 

 

 

கறையார்கடல் சூழ்ந்தகழி

  மாதோட்டநன் னகருட்

சிறையார்பொழில் வண்டியாழ்செயுங்

  கேதீச்சரத் தானை

மறையார்புகழ் ஊரன்னடித்

  தொண்டனுரை செய்த

குறையாத்தமிழ் பத்துஞ்சொலக்

  கூடாகொடு வினையே.  10 

திருச்சிற்றம்பலம்