ஆறாம்-திருமுறை

016 சூலப் படையுடையார் தாமே

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : இடைமருதூர்

திருச்சிற்றம்பலம்

 

சூலப் படையுடையார் தாமே போலுஞ்

சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்

மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்

மந்திரமுந் தந்திரமு மானார் போலும்

வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும்

மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்

ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்

இடைமருது மேவிய ஈச னாரே.  1 

 

 

காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங்

காரானை ஈருரிவை போர்த்தார் போலும்

பாரார் பரவப் படுவார் போலும்

பத்துப் பல்லூழி பரந்தார் போலுஞ்

சீரால் வணங்கப் படுவார் போலுந்

திசையனைத்து மாய்மற்று மானார் போலும்

ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்

இடைமருது மேவிய ஈச னாரே.  2 

 

 

வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்

விண்ணுலகு மண்ணுலகு மானார் போலும்

பூதங்க ளாய புராணர் போலும்

புகழ வளரொளியாய் நின்றார் போலும்

பாதம் பரவப் படுவார் போலும்

பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்

ஏதங்க ளான கடிவார் போலும்

இடைமருது மேவிய ஈச னாரே.  3 

 

 

திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித் 

திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்

விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி

வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்

பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்

பரங்குன்ற மேய பரமர் போலும்

எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்

இடைமருது மேவிய ஈச னாரே.  4 

 

 

ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த 

உயர்பொழி லண்ணாவி லுறைகின் றாரும்

பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப்

படுவெண் டலையிற் பலிகொள் வாரும்

மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு

மணிபொழில் சூழாரூர் உறைகின் றாரும்

ஏகம்ப மேயாரு மெல்லா மாவார்

இடைமருது மேவிய ஈச னாரே.  5 

 

 

ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்

அறுமூன்றும் நான்மூன்று மானார் போலுஞ்

செய்வினைகள் நல்வினைக ளானார் போலுந்

திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலுங்

கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்

கூத்தாட வல்ல குழகர் போலும்

எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்

இடைமருது மேவிய ஈச னாரே.  6 

 

 

பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்

பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்

விரியாத குணமொருகால் நான்கே யென்பர்

விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்

தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும் 

பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்

எரியாய தாமரைமே லியங்கி னாரும்

இடைமருது மேவிய ஈச னாரே.  7 

 

 

தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்

சுடர்வா யரவசைத்த சோதி போலும்

ஆல மமுதாக வுண்டார் போலும்

அடியார்கட் காரமுத மானார் போலுங்

காலனையுங் காய்ந்த கழலார் போலுங்

கயிலாயந் தம்மிடமாகக் கொண்டார் போலும்

ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்

இடைமருது மேவிய ஈச னாரே.  8 

 

 

பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும்

படைக்கணாள் பாக முடையார் போலும்

அந்திவாய் வண்ணத் தழகர் போலும்

மணிநீல கண்ட முடையார் போலும்

வந்த வரவுஞ் செலவு மாகி

மாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்

எந்த மிடர்தீர்க்க வல்லார் போலும்

இடைமருது மேவிய ஈச னாரே.  9 

 

 

கொன்றையங் கூவிள மாலை தன்னைக் 

குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்

நின்ற அனங்கனை நீறா நோக்கி 

நெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்

அன்றவ் வரக்கன் அலறி வீழ 

அருவரையைக் காலா லழுத்தி னாரும்

என்று மிடுபிச்சை ஏற்றுண் பாரும்

இடைமருது மேவிய ஈச னாரே. 10

 

திருச்சிற்றம்பலம்