ஐந்தாம்-திருமுறை

093 காச னைக்கன

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

காச னைக்கன

  லைக்கதிர் மாமணித்

தேச னைப்புக

  ழார்சிலர் தெண்ணர்கள்

மாசி னைக்கழித்

  தாட்கொள வல்லவெம்

ஈச னையினி

  நான்மறக் கிற்பனே.  1 

 

 

புந்திக் குவிளக்

  காய புராணனைச்

சந்திக் கண்நட

  மாடுஞ் சதுரனை

அந்தி வண்ணனை

  ஆரழல் மூர்த்தியை

வந்தெ னுள்ளங்கொண்

  டானை மறப்பனே.  2 

 

 

ஈசன் ஈசனென்

  றென்றும் அரற்றுவன்

ஈசன் றானென்

  மனத்திற் பிரிவிலன்

ஈசன் றன்னையு

  மென்மனத் துக்கொண்டு

ஈசன் றன்னையும்

  யான்மறக் கிற்பனே.  3 

 

 

ஈசன் என்னை

  யறிந்த தறிந்தனன்

ஈசன் சேவடி

  யேற்றப் பெறுதலால்

ஈசன் சேவடி

  யேத்தப் பெற்றேனினி

ஈசன் றன்னையும்

  யான்மறக் கிற்பனே.  4 

 

 

தேனைப் பாலினைத்

  திங்களை ஞாயிற்றை

வான வெண்மதி

  சூடிய மைந்தனை

வேனி லானை

  மெலிவுசெய் தீயழல்

ஞான மூர்த்தியை

  நான்மறக் கிற்பனே.  5 

 

 

கன்ன லைக்கரும்

  பூறிய தேறலை

மின்ன னைமின்

  னனைய வுருவனைப்

பொன்ன னைமணிக்

  குன்று பிறங்கிய

என்ன னையினி

  யான்மறக் கிற்பனே.  6 

 

 

கரும்பி னைக்கட்டி

  யைக்கந்த மாமலர்ச்

சுரும்பி னைச்சுடர்ச்

  சோதியுட் சோதியை

அரும்பி னிற்பெரும்

  போதுகொண் டாய்மலர்

விரும்பும் ஈசனை

  நான்மறக் கிற்பனே.  7 

 

 

துஞ்சும் போதுஞ்

  சுடர்விடு சோதியை

நெஞ்சுள் நின்று

  நினைப்பிக்கு நீதியை

நஞ்சு கண்டத்

  தடக்கிய நம்பனை

வஞ்ச னேனினி

  யான்மறக் கிற்பனே.  8 

 

 

புதிய பூவினைப்

  புண்ணிய நாதனை

நிதியை நீதியை

  நித்திலக் குன்றினைக்

கதியைக் கண்டங்

  கறுத்த கடவுளை

மதியை மைந்தனை

  நான்மறக் கிற்பனே.  9 

 

 

கருகு கார்முகில்

  போல்வதொர் கண்டனை

உருவ நோக்கியை

  ஊழி முதல்வனைப்

பருகு பாலனைப்

  பான்மதி சூடியை

மருவு மைந்தனை

  நான்மறக் கிற்பனே.  10 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சேர்மன் அருணாசலம்
View Details
பசுமடத்துக் கோனார்ச் சித்தர்
View Details
வேலால் கடலைச் சிதைத்தல்
View Details