ஐந்தாம்-திருமுறை

035 அருவ னாய்அத்தி

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : பழனம்

திருச்சிற்றம்பலம்

 

அருவ னாய்அத்தி

  ஈருரி போர்த்துமை

உருவ னாய்ஒற்றி

  யூர்பதி யாகிலும்

பருவ ரால்வயல்

  சூழ்ந்த பழனத்தான்

திருவி னாற்றிரு

  வேண்டுமித் தேவர்க்கே.  1 

 

 

வையம் வந்து

  வணங்கி வலங்கொளும்

ஐய னைஅறி

  யார்சிலர் ஆதர்கள்

பைகொ ளாடர

  வார்த்த பழனன்பால்

பொய்யர் காலங்கள்

  போக்கிடு வார்களே.  2 

 

 

வண்ண மாக

  முறுக்கிய வாசிகை

திண்ண மாகத்

  திருச்சடைச் சேர்த்தியே

பண்ணு மாகவே

  பாடும் பழனத்தான்

எண்ணும் நீரவன்

  ஆயிர நாமமே.  3 

 

 

மூர்க்கப் பாம்பு

  பிடித்தது மூச்சிட

வாக்கப் பாம்பினைக்

  கண்ட துணிமதி

பாக்கப் பாம்பினைப்

  பற்றும் பழனத்தான்

தார்க்கொண் மாலை

  சடைக்கரந் திட்டதே.  4 

 

 

நீல முண்ட

  மிடற்றினன் நேர்ந்ததோர்

கோல முண்ட

  குணத்தால் நிறைந்ததோர்

பாலு முண்டு

  பழனன்பா லென்னிடை

மாலு முண்டிறை

  யென்றன் மனத்துளே.  5 

 

 

மந்த மாக

  வளர்பிறை சூடியோர்

சந்த மாகத்

  திருச்சடை சாத்துவான்

பந்த மாயின

  தீர்க்கும் பழனத்தான்

எந்தை தாய்தந்தை

  எம்பெரு மானுமே.  6 

 

 

மார்க்க மொன்றறி

  யார்மதி யில்லிகள்

பூக்க ரத்திற்

  புரிகிலர் மூடர்கள்

பார்க்க நின்று

  பரவும் பழனத்தான்

தாட்கண் நின்று

  தலைவணங் கார்களே.  7 

 

 

ஏறி னாரிமை

  யோர்கள் பணிகண்டு

தேறு வாரலர்

  தீவினை யாளர்கள்

பாறி னார்பணி

  வேண்டும் பழனத்தான்

கூறி னானுமை

  யாளொடுங் கூடவே.  8 

 

 

சுற்று வார்தொழு

  வார்சுடர் வண்ணன்மேல்

தெற்றி னார்திரி

  யும்புர மூன்றெய்தான்

பற்றி னார்வினை

  தீர்க்கும் பழனனை

எற்றி னான்மறக்

  கேனெம் பிரானையே.  9 

 

 

பொங்கு மாகடல்

  சூழ்இலங் கைக்கிறை

அங்க மான

  இறுத்தருள் செய்தவன்

பங்க னென்றும்

  பழனன் உமையொடுந்

தங்கன் றாளடி

  யேனுடை யுச்சியே. 10

 

திருச்சிற்றம்பலம்