ஐந்தாம்-திருமுறை

021 என்னி லாரும்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : இன்னம்பர்

திருச்சிற்றம்பலம்

 

என்னி லாரும்

  எனக்கினி யாரில்லை

என்னி லும்மினி

  யானொரு வன்னுளன்

என்னு ளேஉயிர்ப்

  பாய்ப்புறம் போந்துபுக்

கென்னு ளேநிற்கும்

  இன்னம்பர் ஈசனே.  1 

 

 

மட்டுண் பார்கள்

  மடந்தையர் வாட்கணால்

கட்டுண் பார்கள்

  கருதுவ தென்கொலோ

தட்டி முட்டித்தள்

  ளாடித் தழுக்குழி

எட்டு மூர்த்தியர்

  இன்னம்பர் ஈசனே.  2 

 

 

கனலுங் கண்ணியுந்

  தண்மதி யோடுடன்

புனலுங் கொன்றையுஞ்

  சூடும் புரிசடை

அனலுஞ் சூலமும்

  மான்மறிக் கையினர்

எனலும் என்மனத்

  தின்னம்பர் ஈசனே.  3 

 

 

மழைக்கண் மாமயி

  லாலும் மகிழ்ச்சியான்

அழைக்குந் தன்னடி

  யார்கள்தம் அன்பினைக்

குழைக்குந் தன்னைக்

  குறிக்கொள வேண்டியே

இழைக்கு மென்மனத்

  தின்னம்பர் ஈசனே.  4 

 

 

தென்ன வனென்னை

  யாளுஞ் சிவனவன்

மன்ன வன்மதி

  யம்மறை யோதியான்

முன்ன மன்னவன்

  சேரலன் பூழியான்

இன்னம் இன்புற்ற

  இன்னம்பர் ஈசனே.  5 

 

 

விளக்கும் வேறு

  படப்பிறர் உள்ளத்தில்

அளக்குந் தன்னடி

  யார்மனத் தன்பினைக்

குளக்கும் என்னைக்

  குறிக்கொள வேண்டியே

இளக்கும் என்மனத்

  தின்னம்பர் ஈசனே.  6 

 

 

சடைக்க ணாள்புன

  லாள்அனல் கையதோர்

கடைக்க ணால்மங்கை

  நோக்கிம வான்மகள்

படைக்க ணாற்பரு

  கப்படு வான்நமக்

கிடைக்க ணாய்நின்ற

  இன்னம்பர் ஈசனே.  7 

 

 

தொழுது தூமலர்

  தூவித் துதித்துநின்

றழுது காமுற்

  றரற்றுகின் றாரையும்

பொழுது போக்கிப்

  புறக்கணிப் பாரையும்

எழுதுங் கீழ்க்கணக்

  கின்னம்பர் ஈசனே.  8 

 

 

விரியுந் தண்ணிள

  வேனிலில் வெண்பிறை

புரியுங் காமனை

  வேவப் புருவமுந்

திரியும் எல்லையில்

  மும்மதில் தீயெழுந்

தெரிய நோக்கிய

  இன்னம்பர் ஈசனே.  9 

 

 

சனியும் வெள்ளியுந்

  திங்களும் ஞாயிறும்

முனிவ னாய்முடி

  பத்துடை யான்றனைக்

கனிய வூன்றிய

  காரண மென்கொலோ

இனிய னாய்நின்ற

  இன்னம்பர் ஈசனே. 10

 

திருச்சிற்றம்பலம்