ஐந்தாம்-திருமுறை

016 மறையு மோதுவர்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : பேரெயில்

திருச்சிற்றம்பலம்

 

மறையு மோதுவர்

  மான்மறிக் கையினர்

கறைகொள் கண்ட

  முடைய கபாலியார்

துறையும் போகுவர்

  தூயவெண் ணீற்றினர்

பிறையுஞ் சூடுவர்

  பேரெயி லாளரே.  1 

 

 

கணக்கி லாரையுங்

  கற்றுவல் லாரையும்

வணக்கி லாநெறி

  கண்டுகொண் டாரையுந்

தணக்கு வார்தணிப்

  பாரெப் பொருளையும்

பிணக்கு வாரவர்

  பேரெயி லாளரே.  2 

 

 

சொரிவிப் பார்மழை

  சூழ்கதிர்த் திங்களை

விரிவிப் பார்வெயிற்

  பட்ட விளங்கொளி

எரிவிப் பார்தணிப்

  பாரெப் பொருளையும்

பிரிவிப் பாரவர்

  பேரெயி லாளரே.  3 

 

 

செறுவிப் பார்சிலை

  யால்மதில் தீர்த்தங்கள்

உறுவிப் பார்பல

  பத்தர்கள் ஊழ்வினை

அறுவிப் பாரது

  வன்றியும் நல்வினை

பெறுவிப் பாரவர்

  பேரெயி லாளரே.  4 

 

 

மற்றை யாரறி

  யார்மழு வாளினார்

பற்றி யாட்டியோர்

  ஐந்தலைப் பாம்பரைச்

சுற்றி யாரவர்

  தூநெறி யால்மிகு

பெற்றி யாரவர்

  பேரெயி லாளரே.  5 

 

 

திருக்கு வார்குழற்

  செல்வன சேவடி

இருக்கு வாய்மொழி

  யாற்றனை யேத்துவார்

சுருக்கு வார்துயர்

  தோற்றங்க ளாற்றறப்

பெருக்கு வாரவர்

  பேரெயி லாளரே.  6 

 

 

முன்னை யார்மயி

  லூர்தி முருகவேள்

தன்னை யாரெனிற்

  றானோர் தலைமகன்

என்னை யாளும்

  இறையவ னெம்பிரான்

பின்னை யாரவர்

  பேரெயி லாளரே.  7 

 

 

உழைத்துந் துள்ளியும்

  உள்ளத்து ளேயுரு

இழைத்து மெந்தை

  பிரானென் றிராப்பகல்

அழைக்கும் அன்பின

  ராய அடியவர்

பிழைப்பு நீக்குவர்

  பேரெயி லாளரே.  8 

 

 

நீரு லாநிமிர்

  புன்சடை யாவெனா

ஏரு லாவனங்

  கன்றிறல் வாட்டிய

வாரு லாவன

  மென்முலை யாளொடும்

பேரு ளாரவர்

  பேரெயி லாளரே.  9 

 

 

பாணி யார்படு

  தம்பெயர்ந் தாடுவர்

தூணி யார்விச

  யற்கருள் செய்தவர்

மாணி யாய்மண்

  ணளந்தவன் நான்முகன்

பேணி யாரவர்

  பேரெயி லாளரே.  10 

 

 

மதத்த வாளரக்

  கன்மணிப் புட்பகஞ்

சிதைக்க வேதிரு

  மாமலைக் கீழ்ப்புக்குப்

பதைத்தங் கார்த்தெடுத்

  தான்பத்து நீண்முடி

பிதக்க வூன்றிய

  பேரெயி லாளரே. 11

 

 

திருச்சிற்றம்பலம்