முதல்-திருமுறை

045 துஞ்ச வருவாருந் தொழுவிப்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : ஆலங்காடு

திருச்சிற்றம்பலம்

 

துஞ்ச வருவாருந் தொழுவிப் பாரும் வழுவிப்போய்

நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப் பாரும் முனைநட்பாய்

வஞ்சப் படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகைகேட்

டஞ்சும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே.  1 

 

கேடும் பிறவியும் ஆக்கி னாருங் கேடிலா

வீடு மாநெறி விளம்பி னாரெம் விகிர்தனார்

காடுஞ் சுடலையுங் கைக்கொண் டெல்லிக் கணப்பேயோ1

டாடும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 2

 

கந்தங் கமழ்கொன்றைக் கண்ணி சூடி கனலாடி

வெந்த பொடிநீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார்

கொந்தண் பொழிற்சோலை யரவில் தோன்றிக் கோடல்பூத்

தந்தண் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே.  3 

 

பால மதிசென்னி படரச் சூடிப் பழியோராக்

கால னுயிர்செற்ற கால னாய கருத்தனார்

கோலம் பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை

ஆலும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே.  4 

 

ஈர்க்கும் புனல்சூடி இளவெண் டிங்கள் முதிரவே

பார்க்கும் அரவம்பூண் டாடி வேடம் பயின்றாரும்

கார்க்கொள் கொடிமுல்லை குருந்த மேறிக் கருந்தேன்மொய்த்

தார்க்கும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே.  5 

 

பறையுஞ் சிறுகுழலும் யாழும் பூதம் பயிற்றவே

மறையும் பலபாடி மயானத் துறையும் மைந்தனார்

பிறையும் பெரும்புனல்சேர் சடையி னாரும் பேடைவண்

டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.  6 

 

நுணங்கு மறைபாடி யாடி வேடம் பயின்றாரும்

இணங்கு மலைமகளோ டிருகூ றொன்றாய் யிசைந்தாரும்

வணங்குஞ் சிறுத்தொண்டர் வைக லேத்தும் வாழ்த்துங்கேட்

டணங்கும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே.  7 

 

கணையும் வரிசிலையும் எரியுங் கூடிக் கவர்ந்துண்ண

இணையில் எயின்மூன்றும் எரித்திட் டாரெம் இறைவனார்

பிணையுஞ் சிறுமறியுங் கலையு மெல்லாங் கங்குல்சேர்ந்

தணையும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே.  8 

 

கவிழ மலைதரளக்2 கடகக் கையால் எடுத்தான்தோள்

பவழ நுனைவிரலாற் பைய வூன்றிப் பரிந்தாரும்

தவழுங் கொடிமுல்லை புறவஞ் சேர நறவம்பூத்

தவிழும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 9

 

பகலும் இரவுஞ்சேர் பண்பி னாரும் நண்போரா

திகலும் இருவர்க்கும் எரியாய்த் தோன்றி நிமிர்ந்தாரும்

புகலும் வழிபாடு வல்லார்க் கென்றுந் தீயபோய்

அகலும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே.  10 

 

போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்

வேழம் வருமளவும் வெயிலே துற்றித் திரிவாரும்

கேழல் வினைபோகக் கேட்பிப் பாருங் கேடிலா

ஆழ்வர் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே.  11 

 

சாந்தங் கமழ்மறுகிற் சண்பை ஞான சம்பந்தன்

ஆந்தண் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளை

வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவைவல்லார்

சேர்ந்த இடமெல்லாந் தீர்த்த மாகச் சேர்வாரே. 12

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

அதிபத்த நாயனார்
View Details
மச்ச முனி
View Details
விண்ணுலகம் சென்றுவிட்ட மலையத்துவஜனை அழைத்தல்
View Details