நான்காம்-திருமுறை

069 செத்தையேன் சிதம்ப

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : கோவலூர் வீரட்டம்

திருச்சிற்றம்பலம்

 

செத்தையேன் சிதம்ப நாயேன் 

  செடியனேன் அழுக்குப் பாயும்

பொத்தையே போற்றி நாளும் 

  புகலிடம் அறிய மாட்டேன்

எத்தைநான் பற்றி நிற்கேன் 

  இருளற நோக்க மாட்டாக்

கொத்தையேன் செய்வ தென்னே 

  கோவல்வீ ரட்ட னீரே.  1 

 

 

தலைசுமந் திருகை நாற்றித் 

  தரணிக்கே பொறைய தாகி

நிலையிலா நெஞ்சந் தன்னுள் 

  நித்தலும் ஐவர் வேண்டும்

விலைகொடுத் தறுக்க மாட்டேன் 

  வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்

குலைகொள்மாங் கனிகள் சிந்தும் 

  கோவல்வீ ரட்ட னீரே.  2 

 

 

வழித்தலைப் படவு மாட்டேன் 

  வைகலுந் தூய்மை செய்து

பழித்திலேன் பாச மற்றுப் 

  பரமநான் பரவ மாட்டேன்

இழித்திலேன் பிறவி தன்னை 

  என்னினைந் திருக்க மாட்டேன்

கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க் 

  கோவல்வீ ரட்ட னீரே.  3 

 

 

சாற்றுவர் ஐவர் வந்து 

  சந்தித்த குடிமை வேண்டிக்

காற்றுவர் கனலப் பேசிக் 

  கண்செவி மூக்கு வாயுள்

ஆற்றுவர் அலந்து போனேன் 

  ஆதியை அறிவொன் றின்றிக்

கூற்றுவர் வாயிற் பட்டேன் 

  கோவல்வீ ரட்ட னீரே.  4 

 

 

தடுத்திலேன் ஐவர் தம்மைத் 

  தத்துவத் துயர்வு நீர்மைப்

படுத்திலேன் பரப்பு நோக்கிப் 

  பன்மலர்ப் பாத முற்ற

அடுத்திலேன் சிந்தை யார 

  ஆர்வலித் தன்பு திண்ணங்

கொடுத்திலேன் கொடிய வாநான் 

  கோவல்வீ ரட்ட னீரே.  5 

 

 

மாச்செய்த குரம்பை தன்னை 

  மண்ணிடை மயக்க மெய்து

நாச்செய்து நாலு மைந்தும் 

  நல்லன வாய்தல் வைத்துக்

காச்செய்த காயந் தன்னுள் 

  நித்தலும் ஐவர் வந்து

கோச்செய்து குமைக்க வாற்றேன் 

  கோவல்வீ ரட்ட னீரே.  6 

 

 

படைகள்போல் வினைகள் வந்து 

  பற்றியென் பக்கல் நின்றும்

விடகிலா வாத லாலே 

  விகிர்தனை விரும்பி யேத்தும்

இடையிலேன் என்செய் கேன்நான் 

  இரப்பவர் தங்கட் கென்றுங்

கொடையிலேன் கொள்வ தேநான் 

  கோவல்வீ ரட்ட னீரே.  7 

 

 

பிச்சிலேன் பிறவி தன்னைப் 

  பேதையேன் பிணக்க மென்னுந்

துச்சுளே அழுந்தி வீழ்ந்து 

  துயரமே இடும்பை தன்னுள்

அச்சனாய் ஆதி மூர்த்திக் 

  கன்பனாய் வாழ மாட்டாக்

கொச்சையேன் செய்வ தென்னே 

  கோவல்வீ ரட்ட னீரே.  8 

 

 

நிணத்திடை யாக்கை பேணி 

  நியமஞ்செய் திருக்க மாட்டேன்

மணத்திடை ஆட்டம் பேசி 

  மக்களே சுற்ற மென்னுங்

கணத்திடை ஆட்டப் பட்டுக் 

  காதலால் உன்னைப் பேணுங்

குணத்திடை வாழ மாட்டேன் 

  கோவல்வீ ரட்ட னீரே.  9 

 

 

விரிகடல் இலங்கைக் கோனை 

  வியன்கயி லாயத் தின்கீழ்

இருபது தோளும் பத்துச் 

  சிரங்களும் நெரிய வூன்றிப்

பரவிய பாடல் கேட்டுப் 

  படைகொடுத் தருளிச் செய்தார்

குரவொடு கோங்கு சூழ்ந்த 

  கோவல்வீ ரட்ட னாரே. 10

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

மாபாதகம் தீர்த்தல்
View Details
ஆலவாயில் எல்லை வகுத்தல்
View Details
காரைக்காலம்மையார்
View Details