நான்காம்-திருமுறை

039 குண்டனாய்ச் சமண

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : ஐயாறு

திருச்சிற்றம்பலம்

 

குண்டனாய்ச் சமண ரோடே 

  கூடிநான் கொண்ட மாலைத்

துண்டனே சுடர்கொள் சோதீ 

  தூநெறி யாகி நின்ற

அண்டனே அமரர் ஏறே 

  திருவையா றமர்ந்த தேனே

தொண்டனேன் தொழுதுன் பாதஞ் 

  சொல்லிநான் திரிகின் றேனே.  1 

 

 

பீலிகை இடுக்கி நாளும் 

  பெரியதோர் தவமென் றெண்ணி

வாலிய தறிகள் போல 

  மதியிலார் பட்ட தென்னே

வாலியார் வணங்கி ஏத்துந் 

  திருவையா றமர்ந்த தேனோ

டாலியா எழுந்த நெஞ்சம் 

  அழகிதா எழுந்த வாறே.  2 

 

 

தட்டிடு சமண ரோடே 

  தருக்கிநான் தவமென் றெண்ணி

ஒட்டிடு மனத்தி னீரே 

  உம்மையான் செய்வ தென்னே

மொட்டிடு கமலப் பொய்கைத் 

  திருவையா றமர்ந்த தேனோ

டொட்டிடும் உள்ளத் தீரே 

  உம்மைநான் உகந்திட் டேனே.  3 

 

 

பாசிப்பல் மாசு மெய்யர் 

  பலமிலாச் சமண ரோடு

நேசத்தா லிருந்த நெஞ்சை 

  நீக்குமா றறிய மாட்டேன்

தேசத்தார் பரவி யேத்துந் 

  திருவையா றமர்ந்த தேனை

வாசத்தால் வணங்க வல்லார் 

  வல்வினை மாயு மன்றே.  4 

 

 

கடுப்பொடி யட்டி மெய்யிற் 

  கருதியோர் தவமென் றெண்ணி

வடுக்களோ டிசைந்த நெஞ்சே 

  மதியிலி பட்ட தென்னே

மடுக்களில் வாளை பாயுந் 

  திருவையா றமர்ந்த தேனை

அடுத்துநின் றுன்னு நெஞ்சே 

  அருந்தவஞ் செய்த வாறே.  5 

 

 

துறவியென் றவம தோரேன் 

  சொல்லிய செலவு செய்து

உறவினால் அமண ரோடும் 

  உணர்விலேன் உணர்வொன் றின்றி

நறவமார் பொழில்கள் சூழ்ந்த 

  திருவையா றமர்ந்த தேனை

மறவிலா நெஞ்ச மேநன் 

  மதியுனக் கடைந்த வாறே.  6 

 

 

பல்லுரைச் சமண ரோடே 

  பலபல கால மெல்லாஞ்

சொல்லிய செலவு செய்தேன் 

  சோர்வனான் நினைந்த போது

மல்லிகை மலருஞ் சோலைத் 

  திருவையா றமர்ந்த தேனை

எல்லியும் பகலு மெல்லாம் 

  நினைந்தபோ தினிய வாறே.  7 

 

 

மண்ணுளார் விண்ணு ளாரும் 

  வணங்குவார் பாவம் போக

எண்ணிலாச் சமண ரோடே 

  இசைந்தனை ஏழை நெஞ்சே

தெண்ணிலா எறிக்குஞ் சென்னித் 

  திருவையா றமர்ந்த தேனைக்

கண்ணினாற் காணப் பெற்றுக் 

  கருதிற்றே முடிந்த வாறே.  8 

 

 

குருந்தம தொசித்த மாலுங் 

  குலமலர் மேவி னானுந்

திருந்துநற் றிருவ டியுந் 

  திருமுடி காண மாட்டார்

அருந்தவ முனிவ ரேத்துந் 

  திருவையா றமர்ந்த தேனைப்

பொருந்திநின் றுன்னு நெஞ்சே 

  பொய்வினை மாயு மன்றே.  9 

 

 

அறிவிலா அரக்க னோடி 

  அருவரை எடுக்க லுற்று

முறுகினான் முறுகக் கண்டு 

  மூதறி வாளன் நோக்கி

நிறுவினான் சிறுவி ரலால் 

  நெரிந்துபோய் நிலத்தில் வீழ

அறிவினால் அருள்கள் செய்தான் 

  திருவையா றமர்ந்த தேனே. 10

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சிறப்புலி நாயனார்
View Details
ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகள்
View Details
கலிய நாயனார்
View Details