நான்காம்-திருமுறை

009 தலையே நீவணங்காய்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

தலையே நீவணங்காய் - தலை

  மாலை தலைக்கணிந்து

தலையா லேபலி தேருந் தலைவனைத்

  தலையே நீவணங்காய்.  1 

 

 

கண்காள் காண்மின்களோ - கடல் 

  நஞ்சுண்ட கண்டன்றன்னை

எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்

  கண்காள் காண்மின்களோ.  2 

 

 

செவிகாள் கேண்மின்களோ - சிவன்

  எம்மிறை செம்பவள

எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் 

  செவிகாள் கேண்மின்களோ.  3 

 

 

மூக்கே நீமுரலாய் - முது

  காடுறை முக்கணனை

வாக்கே நோக்கிய மங்கை மணாளனை

  மூக்கே நீமுரலாய்.  4 

 

 

வாயே வாழ்த்துகண்டாய் - மத

  யானை யுரிபோர்த்துப்

பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை

  வாயே வாழ்த்துகண்டாய்.  5 

 

 

நெஞ்சே நீநினையாய் - நிமிர் 

  புன்சடை நின்மலனை

மஞ்சா டும்மலை மங்கை மணாளனை

  நெஞ்சே நீநினையாய்.  6 

 

 

கைகாள் கூப்பித்தொழீர் - கடி 

  மாமலர் தூவிநின்று

பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்

  கைகாள் கூப்பித்தொழீர்.  7 

 

 

ஆக்கை யாற்பயனென் - அரன் 

  கோயில் வலம்வந்து

பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் 

  வாக்கை யாற்பயனென்.  8 

 

 

கால்க ளாற்பயனென் - கறைக் 

  கண்ட னுறைகோயில்

கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் 

  கால்க ளாற்பயனென்.  9 

 

 

உற்றா ராருளரோ - உயிர் 

  கொண்டு போம்பொழுது

குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்

  குற்றார் ஆருளரோ.  10 

 

 

இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் 

  பல்கணத் தெண்ணப்பட்டுச்

சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்

  கிறுமாந் திருப்பன்கொலோ.  11 

 

 

தேடிக் கண்டுகொண்டேன் - திரு

  மாலொடு நான்முகனுந்

தேடித் தேடொணாத் தேவனை என்னுளே 

  தேடிக் கண்டுகொண்டேன்.  12 

 

திருச்சிற்றம்பலம்