நான்காம்-திருமுறை

001 கூற்றாயின வாறு

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : அதிகை வீரட்டானம்

திருச்சிற்றம்பலம்

 

கூற்றாயின வாறுவி லக்ககிலீர்

  கொடுமைபல செய்தன நானறியேன்

ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் 

  பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே 

  குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில 

  வீரட்டா னத்துறை அம்மானே.  1 

 

 

நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன் 

  நினையாதொரு போதும் இருந்தறியேன்

வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன் 

  வயிற்றோடு துடக்கி முடக்கியிட

நஞ்சாகி வந்தென்னை நலிவதனை 

  நணுகாமல் துரந்து கரந்துமிடீர்

அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில 

  வீரட்டா னத்துறை அம்மானே.  2 

 

 

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் 

  படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்

துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற் 

  சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்

பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்

  பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்

டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில 

  வீரட்டா னத்துறை அம்மனே.  3 

 

 

முன்னம்மடி யேன்அறி யாமையினான் 

  முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்

பின்னையடி யேனுமக் காளும்பட்டேன் 

  சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்

தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ 

  தலையாயவர் தங்கட னாவதுதான்

அன்னநடை யார்அதி கைக்கெடில 

  வீரட்டா னத்துறை அம்மானே.  4 

 

 

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் 

  கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி

நீத்தாய கயம்புக நூக்கியிட 

  நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்

வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் 

  வயிற்றோடு துடக்கி முடக்கியிட

ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில 

  வீரட்டா னத்துறை அம்மானே.  5 

 

 

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் 

  தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் 

  உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்

உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் 

  உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்

அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில 

  வீரட்டா னத்துறை அம்மானே.  6 

 

 

உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் 

  ஒருவர்தலை காவலி லாமையினால்

வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால் 

  வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்

பயந்தேயென் வயிற்றின கம்படியே 

  பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான்

அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில 

  வீரட்டா னாத்துறை அம்மானே.  7 

 

 

வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் 

  வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்

சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச் 

  சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான் 

கலித்தேயென் வயிற்றி னகம்படியே 

  கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன

அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில 

  வீரட்டா னத்துறை அம்மானே.  8 

 

 

பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் 

  புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்

துன்பேகவ லைபிணி யென்றிவற்றை 

  நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்

என்போலிக ளும்மை இனித்தெளியார் 

  அடியார்படு வதிது வேயாகில்

அன்பேஅமை யும்மதி கைக்கெடில 

  வீரட்டா னத்துறை அம்மானே.  9 

 

 

போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் 

  புறங்காடரங் காநட மாடவல்லாய்

ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ் 

  அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்

வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால் 

  என்வேதனை யான விலக்கியிடாய்

ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில 

  வீரட்டா னத்துறை அம்மானே. 10

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

அந்தணப் பெண்ணின் கொலையைக் கண்டுபிடித்தல்
View Details
கலசப்பாக்கம் மலப்பீடான் சித்தர் (பூண்டிச்சித்தர்)
View Details
கூற்றுவ நாயனார்
View Details