மூன்றாம்-திருமுறை

049 காத லாகிக்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : மூன்றாம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

காத லாகிக்

  கசிந்துகண் ணீர்மல்கி

ஓது வார்தமை

  நன்னெறிக் குய்ப்பது

வேதம் நான்கினும்

  மெய்ப்பொரு ளாவது

நாதன் நாமம்

  நமச்சி வாயவே.  1 

 

 

நம்பு வாரவர்

  நாவி னவிற்றினால்

வம்பு நாண்மலர்

  வார்மது வொப்பது

செம்பொ னார்தில

  கம்முல குக்கெலாம்

நம்பன் நாமம்

  நமச்சி வாயவே.  2 

 

 

நெக்கு ளார்வ

  மிகப்பெரு கிந்நினைந்

தக்கு மாலைகொ

  டங்கையில் எண்ணுவார்

தக்க வானவ

  ராத்தகு விப்பது

நக்கன் நாமம்

  நமச்சி வாயவே.  3 

 

 

இயமன் தூதரும்

  அஞ்சுவர் இன்சொலால்

நயம்வந் தோதவல்

  லார்தமை நண்ணினால்

நியமந் தான்நினை

  வார்க்கினி யான்நெற்றி

நயனன் நாமம்

  நமச்சி வாயவே.  4 

 

 

கொல்வா ரேனுங்

  குணம்பல நன்மைகள்

இல்லா ரேனும்

  இயம்புவ ராயிடின்

எல்லாத் தீங்கையும்

  நீங்குவ ரென்பரால்

நல்லார் நாமம்

  நமச்சி வாயவே.  5 

 

 

மந்த ரம்மன

  பாவங்கள் மேவிய

பந்த னையவர்

  தாமும் பகர்வரேல்

சிந்தும் வல்வினை

  செல்வமும் மல்குமால்

நந்தி நாமம்

  நமச்சி வாயவே.  6 

 

 

நரக மேழ்புக

  நாடின ராயினும்

உரைசெய் வாயினர்

  ஆயின் உருத்திரர்

விரவி யேபுகு

  வித்திடு மென்பரால்

வரதன் நாமம்

  நமச்சி வாயவே.  7 

 

 

இலங்கை மன்னன்

  எடுத்த அடுக்கல்மேல்

தலங்கொள் கால்விரல்

  சங்கரன் ஊன்றலும்

மலங்கி வாய்மொழி

  செய்தவன் உய்வகை

நலங்கொள் நாமம்

  நமச்சி வாயவே.  8 

 

 

போதன் போதன

  கண்ணனும் அண்ணல்தன்

பாதந் தான்முடி

  நேடிய பண்பராய்

யாதுங் காண்பரி

  தாகி அலந்தவர்

ஓதும் நாமம்

  நமச்சி வாயவே.  9 

 

 

கஞ்சி மண்டையர்

  கையிலுண் கையர்கள்

வெஞ்சொல் மிண்டர்

  விரவில ரென்பரால்

விஞ்சை அண்டர்கள்

  வேண்ட அமுதுசெய்

நஞ்சுண் கண்டன்

  நமச்சி வாயவே.  10 

 

 

நந்தி நாமம்

  நமச்சிவா யவெனுஞ்

சந்தை யாற்றமிழ்

  ஞானசம் பந்தன்சொல்

சிந்தை யால்மகிழ்ந்

  தேத்தவல் லாரெலாம்

பந்த பாசம்

  அறுக்கவல் லார்களே.  11 

 

திருச்சிற்றம்பலம்