பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

078 வெள்ளானைச் சருக்கம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மூலமான திருத்தொண்டத் தொகைக்கு 

  முதல்வராய் இந்த

ஞாலம் உய்ய எழுந்து அருளும் 

  நம்பி தம்பிரான் தோழர்

காலை மலர்ச் செங்கமலக்கண் 

  கழறிற்று அறிவாருடன் கூட

ஆலம் உண்டார் திருக் கயிலை 

  அணைந்தது அறிந்தபடி உரைப்பாம்.  1 

 

 

படியில் நீடும் பத்தி முதல் 

  அன்பு நீரில் பணைத்து ஓங்கி

வடிவு நம்பி ஆரூரர் செம் 

  பொன் மேனி வனப்பாகக்

கடிய வெய்ய இருவினையின் களை 

  கட்டெழுந்து கதிர் பரப்பி

முடிவு இலாத சிவ போகம் 

  முதிர்ந்து முறுகி விளைந்ததால்.  2 

 

 

ஆரம் உரகம் அணிந்தபிரான் அன்பர் 

  அணுக்க வன் தொண்டர்

ஈர மதுவார் மலர்ச்சோலை எழில் 

  ஆரூரில் இருக்கும் நாள்

சேரர் பெருமாள் தனை நினைந்து 

  தெய்வப் பெருமாள் கழல் வணங்கிச்

சாரல் மலைநாடு அணைவதற்குத் 

  தவிரா விருப்பினுடன் போந்தார்.  3 

 

 

நன்னீர்ப் பொன்னித் திரு நாட்டு 

  நாதர் மகிழும் திருப்பதிகள்

முன்னி இறைஞ்சி அகன்று போய் 

  முல்லைப் படப்பைக்கு ஒல்லைமான்

துன்னி உகைக்கும் குடக் கொங்கில் 

  அணைந்து தூய மதிவான் நீர்

சென்னி மிசை வைத்தவர் செல்வத் 

  திருப்புக்கொளியூர் சென்று அடைந்தார்.  4 

 

 

மறையோர் வாழும் அப்பதியின் மாட 

  வீதி மருங்கு அணைவார்

நிறையும் செல்வத்து எதிர் மனைகள் 

  இரண்டில் நிகழ் மங்கல இயங்கள்

அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றினில் அழுகை 

  ஒலி வந்து எழுதலும் ஆங்கு

உறையும் மறையோர்களை இரண்டும் உடனே 

  நிகழ்வது என் என்றார்.  5 

 

 

அந்தணாளர் வணங்கி அரும் 

  புதல்வர் இருவர் ஐயாண்டு

வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் 

  முதலை ஒரு மகவை

முந்த விழுங்க பிழைத்தவனை 

  முந்நூல் அணியும் கலியாணம்

இந்த மனை மற்று அந்தமனை 

  இழந்தார் அழுகை என்று உரைத்தார்.  6 

 

 

இத்தன்மையினைக் கேட்டருளி 

  இரங்கும் திருவுள்ளத்தினராம்

மொய்த்த முகைத்தார் வன்தொண்டர் தம்மை 

  முன்னே கண்டு இறைஞ்ச

வைத்த சிந்தை மறையோனும் 

  மனைவிதானும் மகவிழந்த

சித்த சோகம் தெரியாமே 

  வந்து திருந்தாள் இறைஞ்சினார்.  7 

 

 

துன்பம் அகல முகம் மலர்ந்து 

  தொழுவார் தம்மை முகம் நோக்கி

இன்ப மைந்தன் தனை இழந்தீர் 

  நீரோ என்ன எதிர் வணங்கி

முன்பு புகுந்து போனது அது 

  முன்னே வணங்க முயல் கின்றோம்

அன்பு பழுது ஆகாமல் எழுந்தருளப் 

  பெற்றோம் எனத் தொழுதார்.  8 

 

 

மைந்தன் தன்னை இழந்த துயர் 

  மறந்து நான் வந்து அணைந்ததற்கே

சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் 

  மனைவி தானும் சிறுவனையான்

அந்த முதலையின் வாய் நின்றும் 

  அழைத்துக் கொடுத்தே அவிநாசி

எந்தை பெருமான் கழல் பணிவேன் 

  என்றார் சென்றார் இடர் களைவார்.  9 

 

 

இவ்வாறு அருளிச் செய்தருளி இவர்கள் 

  புதல்வன் தனைக் கொடிய

வெவ்வாய் முதலை விழுங்கும் மடு 

  எங்கே என்று வினவிக் கேட்டு

அவ்வாழ் பொய்கைக் கரையில் எழுந்தருளி 

  அவனை அன்று கவர்

வைவாள் எயிற்று முதலை கொடு 

  வருதற்கு எடுத்தார் திருப்பதிகம்.  10 

 

 

உரைப்பார் உரை என்று எடுத்த 

  திருப்பாட்டு முடியாமுன் உயர்ந்த

வரைப் பான்மையில் நீள் தடம்புயத்து 

  மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து

திரைப்பாய் புனலின் முதலைவயிற்று 

  உடலில்சென்ற ஆண்டுகளும்

தரைப்பால் வளர்ந்தது என நிரம்ப 

  முதலை வாயில் தருவித்தான்.  11 

 

 

பெருவாய் முதலை கரையின் கண் 

  கொடு வந்து உமிழ்ந்த பிள்ளைதனை

உருகா நின்ற தாய் ஓடி 

  எடுத்துக் கொடுவந்து உயிர் அளித்த

திருவாளன் தன் சேவடிக்கீழ்ச்

    சீலமறையோனொடு வீழ்ந்தாள்

மருவார் தருவின் மலர் மாரி 

  பொழிந்தார் விசும்பில் வானோர்கள்.  12 

 

 

மண்ணினுள்ளார் அதிசயித்தார் மறையோர் 

  எல்லாம் உத்தரியம்

விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார் 

  வேத நாதம் மிக்கு எழுந்தது

அண்ணலாரும் அவிநாசி அரனார் 

  தம்மை அருமறையோன்

கண்ணின் மணியாம் புதல்வனையும் 

  கொண்டு பணிந்தார் காசினிமேல்.  13 

 

 

பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடிப் 

  பணிந்து போந்து அன்பு

விரவு மறையோன் காதலனை 

  வெண்ணூல் பூட்டி அண்ணலார்

முரசம் இயம்பக் கலியாணம் முடித்து 

  முடிச் சேரலர் தம்பால்

குரவ மலர்ப் பூந்தண் சோலை 

  குலவு மலை நாடு அணைகின்றார்.  14 

 

 

சென்ற சென்ற குட புலத்துச் 

  சிவனார் அடியார் பதிகள் தொறும்

நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் 

  சேர் தலமும் கானகமும்

துன்று மணிநீர்க் கான் ஆறும் 

  உறு கல் சுரமும் கடந்தருளிக் 

குன்ற வள நாட்டு அகம் 

  புகுந்தார் குலவும் அடியேன் அகம்புகுந்தார்.  15 

 

 

முன்னாள் முதலை வாய்புக்க 

  மைந்தன் முன்போல் வரமீட்டுத்

தென்னாரூரர் எழுந்து அருளா நின்றார் 

  என்று சேரர் பிரார்க்கு

அந்நாட்டு அரனார் அடியார்கள் 

  முன்னே ஓடி அறிவிப்பப்

பொன்னார் கிழியும் மணிப்பூணும் காசும் 

  தூசும் பொழிந்து அளித்தார்.  16 

 

 

செய்வது ஒன்றும் அறியாது சிந்தை 

  மகிழ்ந்து களி கூர்ந்து என் 

ஐயன் அணைந்தான் எனை ஆளும் 

  அண்ணல் அணைந்தான் ஆரூரில்

சைவன் அணைந்தான் என் துணையாம் 

  தலைவன் அணைந்தான் தரணி எலாம்

உய்ய அணைந்தான் அணைந்தான் என்று 

  ஓகை முரசம் சாற்று வித்தார்.  17 

 

 

பெருகு மதிநூல் அமைச்சர்களை 

  அழைத்துப் பெரியோர் எழுந்தருளப்

பொருவில் நகரம் அலங்கரித்துப் 

  பண்ணிப் பயணம் புறப்படுவித்து

அருவி மத மால் யானையினை அணைந்து 

  மிசை கொண்ட அரசர் பெருந் 

தெருவு கழிய எதிர் வந்தார் 

  சேரர் குலம் உய்ந்திட வந்தார்.  18 

 

 

மலை நாட்டு எல்லை உள் புகுது 

  வந்த வன் தொண்டரை வரையில்

சிலை நாட்டிய வெல் கொடித்தானைச் 

  சேரர் பெருமான் எதிர் சென்று

தலை நாள் கமலப் போது அனைய 

  சரணம் பணியத் தாவில் பல

கலை நாட்டு அமுத ஆரூரர் 

  தாமும் தொழுது கலந்தனரால்.  19 

 

 

சிந்தை மகிழும் சேரலனார் 

  திரு ஆரூரர் எனும் இவர்கள்

தந்த மணி மேனிகள் வேறாம் 

  எனினும் ஒன்றாம் தன்மையராய்

முந்த எழும் காதலில் தொழுது 

  முயங்கி உதியர் முதல் வேந்தர்

எந்தை பெருமான் திருவாரூர்ச் 

  செல்வம் வினவி இன்புற்றார்.  20 

 

 

ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு 

  இன்றி உயர் காதல்

இருவர் நண்பின் செயல் கண்ட 

  இரண்டு திறத்து மாந்தர்களும்

பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் 

  பெருமாள் தமிழின் பெருமாளை

வருகை வரையின் மிசை ஏற்றித் தாம் 

  பின் மதிவெண் குடை கவித்தார்.  21 

 

 

உதியர் பெருமாள் பெருஞ் சேனை 

  ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்ப

கதிர் வெண் திரு நீற்று அன்பர் 

  குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்ப

எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் 

  குழாம் ஏறும் இவுளித் துகள் ஆர்ப்ப

மதி தங்கிய மஞ்சு அணி 

  இஞ்சி வஞ்சி மணிவாயிலை அணைந்தார்.  22 

 

 

ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் 

  குணலைகள் அந்தணர்

வாரண மத மழை சிந்தின 

  வாசிகள் கிளர் ஒளி பொங்கின

பூரண கலசம் மலிந்தன பூ 

  மழை மகளிர் பொழிந்திடு

தோரண மறுகு புகுந்தது 

  தோழர்கள் நடவிய குஞ்சரம்.  23 

 

 

அரிவையர் தெருவில் நடம் பயில் 

  அணி கிளர் தளிரடி தங்கிய

பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை 

  முரசு ஒலிகள் பரந்தன

சுரிவனை நிரைகள் முரன்றன துணைவர்கள் 

  இருவரும் வந்து அணி

விரிதரு பவன நெடும் கடை 

  விறல் மத கரியின் இழிந்தனர்.  24 

 

 

தூ நறு மலர் தரளம் பொரிதூவி 

  முன் இரு புடையின் கணும்

நான் மறை முனிவர்கள் மங்கல 

  நாம நன்மொழிகள் விளம்பிட

மேல் நிறை நிழல் செய வெண் 

  குடை வீசிய கவரி மருங்குற

வானவர் தலைவரும் நண்பரும் 

  மாளிகை நடுவு புகுந்தனர்.  25 

 

 

அரியணை அதனில் விளங்கிட அடல் 

  மழ விடை என நம்பியை

வரிமலர் அமளி அமர்ந்திட மலையர்கள் 

  தலைவர் பணிந்து பின்

உரிமை நல் வினைகள் புரிந்தன உரை 

  முடிவில என முன் செய்து

பரிசனம் மனம் மகிழும்படி பல 

  பட மணி நிதி சிந்தினர்.  26 

 

 

இன்ன தன்மையில் உதியர்கள் 

  தலைவர்தாம் இடர்கெட முனைப்பாடி

மன்னர் தம்முடன் மகிழ்ந்து இனிதுறையும் 

  நாள்மலை நெடு நாட்டெங்கும்

பன்னகம் புனை பரமர் தம் 

  திருப்பதி பலவுடன் பணிந்து ஏத்திப்

பொன் நெடும் தட மூதெயில் 

  மகோதையில் புகுந்தனர் வன்தொண்டர்.  27 

 

 

ஆய செய்கையில் நாள் பல 

  கழிந்தபின் அரசர்கள் முதல் சேரர்

தூய மஞ்சனத் தொழிலினில் 

  தொடங்கிடத் துணைவராம் வன்தொண்டர்

பாய கங்கை சூழ் நெடும் சடைப் 

  பரமரைப் பண்டுதாம் பிரிந்து எய்தும்

சேய நன்னெறி குறுகிடக் குறுகினார் 

  திருவஞ்சைக் களம் தன்னில்.  28 

 

 

கரிய கண்டர் தம் கோயிலை வலம் 

  கொண்டு காதலால் பெருகு அன்பு

புரியும் உள்ளத்தர் உள்ளணைந்து இறைவர் 

  தம் பூங் கழலிணை போற்றி

அரிய செய்கையில் அவனியில் விழுந்தெழுந்து 

  அலைப்புறு மனை வாழ்க்கை

சரியவே தலைக்குத் தலை மாலை 

  என்று எடுத்தனர் தமிழ் மாலை.  29 

 

 

எடுத்த அத்திருப் பதிகத்தின் உட் 

  குறிப்பு இவ்வுலகினில் பாசம்

அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டும் 

  என்று அன்பர் அன்பினில் பாடக்

கடுத்த தும்பிய கண்டர் தம் 

  கயிலையில் கணத்தவருடன் கூடத்

தடுத்த செய்கைதான் முடிந்திடத் தங்கழல் 

  சார்பு தந்து அளிக்கின்றார்.  30 

 

 

மன்றலந் தரு மிடைந்த பூம் 

  கயிலையில் மலை வல்லியுடன் கூட

வென்றி வெள்விடைப் பாகர் தாம் 

  வீற்றிருந்தருளிய பொழுதின் கண்

ஒன்று சிந்தை நம் ஊரனை 

  உம்பர் வெள்ளானையி னுடன் ஏற்றிச்

சென்று கொண்டு இங்கு வாருமென்று அயன் 

  முதல் தேவர்கட்கு அருள் செய்தார்.  31 

 

 

வான நாடர்கள் அரி அயன் முதலினோர் 

  வணங்கி முன் விடை கொண்டு

தூ நலம் திகழ் சோதி 

  வெள்ளானையும் கொண்டு வன் தொண்டர்க்குத்

தேன் அலம்பு தண் சோலை சூழ் 

  மாகோதையில் திருவஞ்சைக் களம் சேரக்

கானிலங் கொள வலம் கொண்டு 

  மேவினார் கடிமதில் திருவாயில்.  32 

 

 

தேவர் தங்குழாம் நெருங்கிய 

  வாய்தலில் திருநாவலூரார் தம்

காவல் மன்னரும் புறப்பட 

  எதிர்கொண்டு கயிலை வீற்றிருக்கின்ற

பூவலம்பு தண் புனல் சடை 

  முடியவர் அருளிப்பாடு எனப் போற்றி

ஏவல் என்றபின் செய்வது ஒன்று 

  இலாதவர் பணிந்தெழுந்து எதிரேற்றார்.  33 

 

 

ஏற்ற தொண்டரை அண்டர் வெள்ளானையின் 

  எதிர் வலம் கொண்டு ஏற்ற

நாற்றடங் கடல் முழக்கு என ஐவகை 

  நாதம் மீது எழுந்து ஆர்ப்பப்

போற்றி வானவர் பூமழை பொழிந்திடப் 

  போதுவார் உயிர் எல்லாம்

சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் 

  துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார்.  34 

 

 

சேரர் தம்பிரான் தோழர் 

  தஞ்செயல் அறிந்து அப்போதே

சார நின்றதோர் பரியினை மிசைக் 

  கொண்டு திருவஞ்சைக் களம்சார்வார்

வீர வெண் களிறுகைத்து விண்மேல் 

  செலும் மெய்த்தொண்டர் தமைக் கண்டார்

பாரில் நின்றிலர் சென்றதம் மனத்தொடு 

  பரியும் முன் செலவிட்டார்.  35 

 

 

விட்ட வெம்பரிச் செவியினில் புவி 

  முதல் வேந்தர் தாம் விதியாலே

இட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் 

  இரு விசும்பு எழப் பாய்ந்து

மட்டலர்ந்த பைந் தெரியல் வன் 

  தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை

முட்ட எய்தி வலம் கொண்டு 

  சென்றது மற்று அதன் முன்னாக.  36 

 

 

உதியர் மன்னவர் தம் பெருஞ் 

  சேனையின் உடன் சென்ற படைவீரர்

கதிகொள் வாசியில் செல்பவர் 

  தம்மைத்தங்கட்புலப்படும் எல்லை

எதிர் விசும்பினில் கண்டு பின் 

  கண்டிலர் ஆதலின் எல்லாரும்

முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் 

  முறை முறை உடல் வீழ்ந்தார்.  37 

 

 

வீரயாக்கையை மேல் கொண்டு சென்று 

  போய் வில்லவர் பெருமானைச்

சார முன் சென்று சேவகம் ஏற்றனர் 

  தனித் தொண்டர்மேல் கொண்ட

வாரும் மும்மதத்து அருவி வெள்ளானைக்கு 

  வயப் பரி முன் வைத்துச்

சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் 

  திருமலைத் திசை நோக்கி.  38 

 

 

யானை மேல் கொண்டு செல்கின்ற 

  பொழுதினில் இமையவர் குழாம் என்னும்

தானை முன் செலத் தானெனை முன் 

  படைத்தான் எனும் தமிழ் மாலை

மானவன் தொண்டர் பாடி முன் அணைந்தனரர் 

  மதி நதி பொதி வேணித்

தேன் அலம்பு தண் கொன்றையார் 

  திருமலைத் தென்திசைத் திருவாயில்.  39 

 

 

மாசில் வெண்மை சேர் பேரொளி 

  உலகெலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை

ஆசில் அன்பர் தம் சிந்தை போல் 

  விளங்கிய அணி கிளர் மணிவாயில்

தேசுதங்கிய யானையும் புரவியும் 

  இழிந்து சேணிடைச் செல்வார்

ஈசர் வெள்ளி மாமலைத் தடம் 

  பல கடந்து எய்தினார் மணிவாயில்.  40 

 

 

அங்கண் எய்திய திரு அணுக்கன் 

  திரு வாயிலின் அடல் சேரர்

தங்கள் காவலர் தடையுண்டு 

  நின்றனர் தம்பிரான் அருளாலே

பொங்கு மாமதம் பொழிந்த வெள்ளானையின் 

  உம்பர் போற்றிடப் போந்த

நங்கள் நாவலூர்க் காவலர் 

  நண்ணினார் அண்ணலார் திருமுன்பு.  41 

 

 

சென்று கண்ணுதல் திருமுன்பு தாழ்ந்து 

  வீழ்ந்தெழுந்து சேணிடை விட்ட

கன்று கோவினைக் கண்டு அணைந்தது 

  எனக் காதலின் விரைந்து எய்தி

நின்று போற்றிய தனிப் பெருந் 

  தொண்டரை நேரிழை வலப் பாகத்து

ஒன்றும் மேனியர் ஊரனே 

  வந்தனை என்றனர் உலகுய்ய.  42 

 

 

அடியனேன் பிழை பொறுத்து எனை 

  ஆண்டு கொண்டத் தொடக்கினை நீக்கி

முடிவிலா நெறி தரும் பெரும் கருணை 

  என் தரத்ததோ என முன்னர்ப் 

படியும் நெஞ்சொடு பன்முறை பணிந்து 

  எழும் பரம்பரை ஆனந்த

வடிவு நின்றது போன்று இன்ப 

  வெள்ளத்து மலர்ந்தனர் வன் தொண்டர்.  43 

 

 

நின்ற வன் தொண்டர் நீரணி வேணிய 

  நின் மலர்க் கழல் சாரச்

சென்று சேரலன் திரு மணி வாயிலின் 

  புறத்தினன் எனச் செப்ப

குன்ற வில்லியார் பெரிய தேவரை சென்று 

  கொணர்க என அவர் எய்தி

வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என 

  அவர் கழல்தொழ விரைந்து எய்தி.  44 

 

 

மங்கை பாகர் தம் திருமுன்பு 

  சேய்த்தாக வந்தித்து மகிழ்வு எய்திப்

பொங்கும் அன்பினில் சேரலர் 

  போற்றிடப் புதுமதி அலைகின்ற

கங்கைவார் சடைக் கயிலை நாயகர் 

  திருமுறுவலின் கதிர் காட்டி

இங்கு நாம் அழையாமை நீ எய்தியது 

  என் என அருள் செய்தார்.  45 

 

 

அரசர் அஞ்சலி கூப்பி நின்று 

  அடியனேன் ஆரூரர் கழல் போற்றிப்

புரசை யானை முன் சேவித்து வந்தனன் 

  பொழியும் நின் கருணைத் தெண் 

திரை செய் வெள்ளமுன் கொடுவந்து 

  புகுதலின் திருமுன்பு வரப் பெற்றேன்

விரைசெய் கொன்றை சேர் வேணியாய் 

  இனியொரு விண்ணப்பம் உளது என்று.  46 

 

 

பெருகு வேதமும் முனிவரும் துதிப்பரும் 

  பெருமையாய் உனை அன்பால்

திருவுலாப் புறம் பாடினேன் திருச்செவி 

  சாத்திடப் பெற வேண்டும்

மருவு பாசத்தை அகன்றிட வன்தொண்டர் 

  கூட்டம் வைத்தாய் என்ன

அருளும் ஈசரும் சொல்லுக 

  என்றனர் அன்பரும் கேட்பித்தார்.  47 

 

 

சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த 

  திருவுலாப் புறம் கொண்டு

நாரி பாகரும் நலம் மிகு திருவருள் 

  நயப்புடன் அருள் செய்வார்

ஊரன் ஆகிய ஆலால 

  சுந்தரனுடன் அமர்ந்து இருவீரும்

சார நங்கண நாதர்தம் தலைமையில் 

  தங்கும் என்று அருள் செய்தார்.  48 

 

 

அன்ன தன்மையில் இருவரும் பணிந்தெழுந்து 

  அருள் தலை மேல் கொண்டு

மன்னும் வன்தொண்டர் ஆலால சுந்தரர் 

  ஆகித் தாம் வழுவாத

முன்னை நல்வினைத் தொழில் தலை 

  நின்றனர் முதல் சேரர் பெருமானும்

நன்மை சேர் கண நாதராய் அவர் 

  செயும் நயப்புறு தொழில் பூண்டார்.  49 

 

 

தலத்து வந்துமுன் உதயம் செய் 

  பரவையார் சங்கிலியார் என்னும்

நலத்தின் மிக்கவர் வல்வினைத் 

  தொடக்கற நாயகி அருளாலே

அலத்த மெல்லடிக் கமலினியாருடன் 

  அனிந்தை யாராகி 

மலைத் தனிப் பெருமான் மகள் கோயிலில் 

  தம் தொழில் வழிநின்றார்.  50 

 

 

வாழி மாதவர் ஆலால சுந்தரர் 

  வழியிடை அருள் செய்த

ஏழிசைத் திருப்பதிகம் இவ்வுலகினில் 

  ஏற்றிட எறி முன்நீர்

ஆழி வேந்தனாம் வருணனுக்கு அளித்திட 

  அவனும் அவ்வருள் சூடி

ஊழியில் தனி ஒருவர் தம் திருவஞ்சைக் 

  களத்தில் உய்த்து உணர்வித்தான்.  51 

 

 

சேரர் காவலர் விண்ணப்பம் செய்த 

  அத் திருவுலாப் புறம் அன்று

சாரல் வெள்ளியங்கயிலையில் கேட்ட 

  மா சாத்தனார் தரித்து இந்தப்

பாரில் வேதியர் திருப்பிடவூர் தனில் 

  வெளிப்படப் பகர்ந்து எங்கும்

நார வேலை சூழ் உலகினில் 

  விளங்கிட நாட்டினர் நலத்தாலே.  52 

 

 

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்

ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட

மன்றுளார் அடியாரவர் வான் புகழ்

நின்றது எங்கும் நிலவி உலகெலாம்

 

வெள்ளானைச் சருக்கம் முற்றிற்று.

இரண்டாம் காண்டம் முற்றிற்று.

பெரிய புராணம் முற்றிற்று.

பன்னிரண்டாம் திருமுறை முற்றிற்று.  53 

திருச்சிற்றம்பலம்