அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
சொல் விளங்கு சீர்த் தொண்டைநன்னாட்டிடை
மல்லல் நீடிய வாய்மை வளம்பதி
பல்பெருங்குடி நீடு பரம்பரைச்
செல்வ மல்கு திருமயிலா புரி. 1
நீடு வேலை தன் பால் நிதி வைத்திடத்
தேடும் அப்பெருஞ் சேம வைப்பாம் என
ஆடு பூங்கொடி மாளிகை அப்பதி
மாடு தள்ளும் மரக்கலச் செப்பினால். 2
கலம் சொரிந்த கரிக்கருங்கன்று முத்து
அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும்
நலங் கொள் மேதி நன்னாகும் தெரிக்க ஒணா
சிலம்பு தெண்திரைக் கானலின் சேண் எலாம். 3
தவள மாளிகைச் சாலை மருங்கிறைத்
துவள் பதாகை நுழைந்து அணை தூமதி
பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி
உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்குமால். 4
வீதி எங்கும் விழா அணிக் காளையர்
தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர்
ஓதி எங்கும் ஒழியா அணிநிதி
பூதி எங்கும் புனை மணிமாடங்கள். 5
மன்னு சீர் மயிலைத் திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல் குல
நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார்
தன்மை வாயிலார் என்னும் தபோதனர். 6
வாயிலார் என நீடிய மாக்குடித்
தூய மா மரபின் முதல் தோன்றியே
நயனார் திருத்தொண்டின் நயப்புறு
மேய காதல் விருப்பின் விளங்குவார். 7
மறவாமையான் அமைத்த
மனக்கோயிலுள் இருத்தி
உறவாதிதனை உணரும் ஒளி
விளக்குச் சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும்
திருமஞ்சனம் ஆட்டி
அறவாணர்க்கு அன்பென்னும் அமுதமைத்து
அர்ச்சனை செய்வார். 8
அகம் மலர்ந்த அர்ச்சனையில்
அண்ணலார் தமை நாளும்
நிகழ வரும் அன்பினால்
நிறை வழிபாடு ஒழியாமே
திகழ நெடுநாள் செய்து
சிவபெருமான் அடிநிழல் கீழ்ப்
புகல் அமைத்துத் தொழுது இருந்தார்
புண்ணிய மெய்த் தொண்டனார். 9
நீராருஞ் சடையாரை
நீடுமன ஆலயத்துள்
ஆராத அன்பினால் அருச்சனை
செய்து அடியவர்பால்
பேராத நெறி பெற்ற
பெருந் தகையார் தமைப்போற்றிச்
சீர் ஆரும் திரு நீடூர்
முனையடுவார் திறம் உரைப்பாம். 10
திருச்சிற்றம்பலம்