பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

019 அரிவாட்டாய நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

வரும் புனற்பொன்னி நாட்டு ஒரு வாழ்பதி

சுரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட

விரும்பு மென்கண் உடையவாய் விட்டு நீள்

கரும்பு தேன் சொரியும் கணமங்கலம்.  1 

 

 

செந்நெல்லார் வயல் கட்ட செந்தாமரை

முன்னர் நந்துமிழ் முத்தம் சொரிந்திடத்

துன்னு மள்ளர் கைம் மேற் கொண்டு 

  தோன்றுவார்

மன்னு பங்கய மாநிதி போன்றுள்ளார்.  2 

 

 

வளத்தில் நீடும் பதியதன் கண்வரி

உளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும்

களத்தின் மீதும் கயல்பாய் வயல் அயல்

குளத்தும் நீளும் குழையுடை நீலங்கள்.  3 

 

 

அக்குலப் பதி தன்னில் அறநெறித்

தக்க மாமனை வாழ்க்கையில் தங்கினார்

தொக்க மாநிதித் தொன்மையில் ஓங்கிய

மிக்க செல்வத்து வேளாண் தலைமையார்.  4 

 

 

தாயனார் எனும் நாமம் தரித்துளார்

சேய காலந் தொடர்ந்துந் தெளிவிலா

மாயனார் மண் கிளைத்து அறியாத அத்

தூய நாண் மலர்ப் பாதம் தொடர்ந்துளார்.  5 

 

 

மின்னும் செஞ்சடை வேதியர்க்காம் என்று

செந் நெல் இன்னமுதோடு செங்கீரையும்

மன்னு பைந்துணர் மாவடுவும் கொணர்ந்து

அன்ன என்றும் அமுது செய்விப்பாரால்.  6 

 

 

இந்த நன்னிலை இன்னல் வந்து எய்தினும்

சிந்தை நீங்காச் செயலின் உவந்திட

முந்தை வேத முதல்வர் அவர் வழி

வந்த செல்வம் அறியாமை மாற்றினார்.  7 

 

 

மேவு செல்வம் களிறு உண் விளங்கனி

ஆவதாகி அழியவும் அன்பினால்

பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அத்

தாவில் செய்கை தவிர்ந்திலர் தாயனார்.  8 

 

 

அல்லல் நல்குரவு ஆயிடக் கூலிக்கு

நெல் அறுத்து மெய்ந் நீடிய அன்பினால்

நல்ல செந்நெலிற் பெற்றன நாயனார்க்கு

ஒல்லை இன்னமுதாக் கொண்டு ஒழுகுவார்.  9 

 

 

சாலி தேடி அறுத்தவை தாம் பெறும்

கூலி எல்லாம் திரு அமுதாக் கொண்டு

நீல நெல்லரி கூலி கொண்டு உண்ணும் நாள்

மால் அயற்கு அரியார் அது மாற்றுவார்.  10 

 

 

நண்ணிய வயல்கள் எல்லாம் நாள் 

  தொறும் முன்னம் காண

வண்ணவார் கதிர்ச் செஞ்சாலி 

  ஆக்கிட மகிழ்ந்து சிந்தை

அண்ணலார் அறுத்த கூலி கொண்டு 

  இஃது அடியேன் செய்த

புண்ணியம் என்று போத 

  அமுது செய்விப்பார் ஆனார்.  11 

 

 

வைகலும் உணவு இலாமை 

  மனைப் படப்பையினிற் புக்கு

நைகரம் இல்லா அன்பின் நங்கை 

  கைஅடகு கொய்து

பெய்கலத்து அமைத்து வைக்கப் 

  பெருந்தகை அருந்தித் தங்கள்

செய்கடன் முட்டா வண்ணந் 

  திருப்பணி செய்யும் நாளில்.  12 

 

 

மனை மருங்கு அடகு மாள 

  வட நெடு வான மீனே

அனையவர் தண்ணீர் வார்க்க 

  அமுது செய்து அன்பனாரும்

வினை செயல் முடித்துச் செல்ல 

  மேவு நாள் ஒருநாள் மிக்க

முனைவனார் தொண்டர்க்கு அங்கு 

  நிகழ்ந்தது மொழியப் பெற்றேன்.  13 

 

 

முன்பு போல் முதல்வனாரை 

  அமுது செய்விக்க மூளும்

அன்பு போல் தூய செந்நெல் 

  அரிசி மாவடு மென் கீரை

துன்புபோம் மனத்துத் தொண்டர் 

  கூடையில் சுமந்து போகப்

பின்புபோம் மனைவியார் ஆன் பெற்ற 

  அஞ்சு ஏந்திச் சென்றார்.  14 

 

 

போதரா நின்ற போது புலர்ந்து 

  கால் தளர்ந்து தப்பி

மாதரார் வருந்தி வீழ்வார் 

  மட்கல மூடுகையால்

காதலால் அணைத்தும் எல்லாம் 

  கமரிடைச் சிந்தக் கண்டு

பூதநாயகர் தம் தொண்டர் போவது 

  அங்கு இனி ஏன் என்று.  15 

 

 

நல்ல செங்கீரை தூய 

  மாவடு அரிசி சிந்த

அல்லல் தீர்த்தாள வல்லார் அமுது 

  செய்து அருளும் அப்பேறு

எல்லையில் தீமையேன் இங்கு 

  எய்திடப் பெற்றிலேன் என்று

ஒல்லையில் அரிவாள் பூட்டி 

  ஊட்டியை அரியல் உற்றார்.  16 

 

 

ஆட் கொள்ளும் ஐயர் தாம் இங்கு 

  அமுது செய்திலர் கொல் என்னாப்

பூட்டிய அரிவாள் பற்றிப் 

  புரையற விரவும் அன்பு

காட்டிய நெறியின் உள்ளந் 

  தண்டு அறக் கழுத்தினோடே

ஊட்டியும் அரியா நின்றார் 

  உறுபிறப் பரிவார் ஒத்தார்.  17 

 

 

மாசறு சிந்தை அன்பர் கழுத்து 

  அரி அரிவாள் பற்றும்

ஆசில்வண் கையை மாற்ற 

  அம்பலத்து ஆடும் ஐயர்

வீசிய செய்ய கையும் மாவடு 

  விடேல் விடேல் என்ற 

ஓசையும் கமரில் நின்றும் 

  ஒக்கவே எழுந்த அன்றே.  18 

 

 

திருக்கை சென்று அரிவாள் பற்றும் 

  திண் கையைப் பிடித்த போது

வெருக்கொடங் கூறு நீங்க வெவ் 

  வினை விட்டு நீங்கிப்

பெருக்கவே மகிழ்ச்சி நீடத் 

  தம்பிரான் பேணித் தந்த

அருட் பெரும் கருணை நோக்கி 

  அஞ்சலி கூப்பி நின்று.  19 

 

 

அடியனேன் அறிவு இலாமை கண்டும் 

  என் அடிமை வேண்டிப்

படி மிசைக் கமரில் வந்து இங்கு 

  அமுது செய் பரனே போற்றி

துடியிடை பாக மான 

  தூயநற் சோதி போற்றி

பொடியணி பவள மேனிப் புரி 

  சடைப் புராண போற்றி.  20 

 

 

என்றவர் போற்றி செய்ய 

  இடப வாகனராய்த் தோன்றி

நன்று நீ புரிந்த செய்கை 

  நன்னுதல் உடனே கூட

என்றும் நம் உலகில் வாழ்வாய் 

  என்று அவர் உடனே நண்ண

மன்றுளே ஆடும் ஐயர் மழ 

  விடை உகைத்துச் சென்றார்.  21 

 

 

பரிவு உறு சிந்தை அன்பர் 

  பரம் பொருளாகி உள்ள

பெரியவர் அமுது செய்யப் 

  பெற்றிலேன் என்று மாவின்

வரிவடு விடேலெனா முன் வன் 

  கழுத்து அரிவாள் பூட்டி

அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் 

  தூய நாமம்.  22 

 

 

முன்னிலை கமரே யாக 

  முதல்வனார் அமுது செய்யச்

செந்நெலின் அரிசி சிந்தச் 

  செவியுற வடுவின் ஓசை

அந் நிலை கேட்ட தொண்டர் 

  அடி இணை தொழுது வாழ்த்தி

மன்னும் ஆனாயர் செய்கை 

  அறிந்தவா வழுத்தல் உற்றேன்.  23 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

நேச நாயனார்
View Details
வன்னி மரம்ரூபவ் கிணறுரூபவ் சிவலிங்கம் சாட்சி
View Details
பதஞ்சலி
View Details