முதல்-திருமுறை

113 எரித்தவன் முப்புரம்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் :  வல்லம்

திருச்சிற்றம்பலம்

 

எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்

தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்

விரித்தவன் வேதங்கள் வேறுவேறு

தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே.  1 

 

தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத்

தூயவன் தூமதி சூடியெல்லாம்

ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ்

சேயவன் உறைவிடந் திருவல்லமே.  2 

 

பார்த்தவன் காமனைப் பண்பழியப்

போர்த்தவன் போதகத் தின்னுரிவை

ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று

சேர்த்தவன் உறைவிடந் திருவல்லமே.  3 

 

கொய்தஅம் மலரடி கூடுவார்தம்

மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்

பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்

செய்தவன் உறைவிடந் திருவல்லமே.  4 

 

சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம்

நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித்

தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே

சேர்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.  5 

 

பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்

உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று

விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று

சிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே.  6 

 

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  7 

 

இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்

ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்

நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே

திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.  8 

 

பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய

அரியவன் அருமறை யங்கமானான்

கரியவன் நான்முகன் காணவொண்ணாத்

தெரியவன் உறைவிடந் திருவல்லமே.  9 

 

அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்

குன்றிய அறவுரை கூறாவண்ணம்

வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ்

சென்றவன் உறைவிடந் திருவல்லமே.  10 

 

கற்றவர் திருவல்லங் கண்டுசென்று

நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன

குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்

பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே. 11

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

பிண்ணாக்கீசர்
View Details
திருவாதவூரருக்கு உபதேசித்தல்
View Details
அஷ்டமா சித்தி உபதேசித்தல்
View Details