பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 20. அணைந்தோர் தன்மை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மலமில்லை மாசில்லை மானாபி மானம்

குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை

நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே

பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே.  1 

 

 

ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்

கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்

அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்

செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே.  2 

 

 

ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும்

சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்

பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு

கோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே.  3 

 

 

ஆராலும் என்னை அமட்டஒண் ணாதினிச்

சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்

சீராடி அங்கே திரிவதல் லால் இனி

யார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனே.  4 

 

 

பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்

தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை

அரிந்தேன் வினையை அயில்மன வாளால்

முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.  5 

 

 

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்

ஒன்றுகண் டீர்உல குக்குஉயி ராவதும்

நன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழம்

தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.  6 

 

 

சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்

வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்

அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்

சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே.  7 

 

 

பண்டுஎங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்

கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லை

விண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில்

துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே.  8 

 

 

அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது

அன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னை

அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து

அன்னையும் அத்தனை யான்புரந் தேனே.  9 

 

 

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்

அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்

எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளே

உண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே.  10 

 

 

தானே திசையொடு தேவருமாய் நிற்கும்

தானே வடவரை ஆதியுமாய நிற்கும்

தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்

தானே உலகில் தலைவனும் ஆமே.  11 

 

 

நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்

சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்

பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்

தவம்வரும் சிந்தைக்குத் தான்எதிராமே.  12 

 

 

சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர்

சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்

கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்

சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே.  13 

 

 

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்

வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்

வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடி

நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.  14 

 

 

சிவபெரு மான்என்று நான்அழைத்து ஏத்தத்

தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான்

அவபெரு மான்என்னை யாளுடை நாதன்

பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.  15 

 

 

பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்

துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன்

அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்

தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.  16 

 

 

என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து

முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்

தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி

பின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே.  17 

 

 

பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்

கணக்கறுத் தாண்டனன் காண்நந்தி என்னைப்

பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்

வணக்கலுற் றேன்சிவம் வந்தது தானே.  18 

 

 

சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்

பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு

அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்

அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே.  19 

 

 

கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்

அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்

விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்

கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே.  20 

 

 

உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்

வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்

செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்

கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே.  21 

 

 

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று

தூண்டா விளக்கின் தகளிநெய் சோர்தலும்

பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி

மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.  22 

 

 

ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டு

நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்

கூறே குவிமுலை கொம்பனை யாளொடும்

வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.  23 

 

 

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்

என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்

என்பொன் மணியை இறைவனை ஈசனைத்

தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.  24 

 

 

மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்

மனம்வி ரிந்து குவிந்தது வாயு

மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்

மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே.  25 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

நூல்களின் ஏற்ற தாழ்வு கண்டறிதல்
View Details
கரிக்குருவிக்கு உபதேசம் செய்தல்
View Details
மேருவிலிருந்து பொன் பறித்தல்
View Details