பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 05. தூல பஞ்சாக்கரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்

ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்

ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்

ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே.  1 

 

 

அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி

உகார முதலாக ஓங்கி உதித்து

மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி

நகார முதலாகும் நந்திதன் நாமமே.  2 

 

 

அகராதி ஈரெண் கலந்த பரையும்

உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன்

சிகராதி தான்சிவ வேதமே கோணம்

நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே.  3 

 

 

வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி

ஆய இலிங்கம் அவற்றின்மேலே அவ்வாய்த்

தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்

ஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே.  4 

 

 

கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்

கரணங்கள் விட்டுயிர் தானெழும் போது

மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும்

அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே.  5 

 

 

ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்

ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர்

சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும்

வாயுற ஓதி வழுத்தலும் ஆமே.  6 

 

 

தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்று

உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்

வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர்

துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே.  7 

 

 

குருவழி யாய குணங்களில் நின்று

கருவழி யாய கணக்கை அறுக்க

வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு

அருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே.  8 

 

 

வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது

செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும்

குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்

குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே.  9 

 

 

நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று

துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று

மஞ்சு தவழும் வடவரை மீதுறை

அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.  10 

 

 

பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது

இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்

பராமுற்றும் கீழொடு பல்வகை யாலும்

அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே.  11 

திருச்சிற்றம்பலம்