பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 43. சோதனை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து

அம்மா னடிதந் தருட்கடல் ஆடினோம்

எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச்

சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே.  1 

 

 

அறிவுடை யானரு மாமறை யுள்ளே

செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன்

பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த

குறியுடை யானொடுங் கூடுவன் நானே.  2 

 

 

அறிவறி வென்றங் கரற்றும் உலகம்

அறிவறி யாமையை யாரும் அறியார்

அறிவறி யாமை கடந்தறி வானால்

அறிவறி யாமை யழகிய வாறே.  3 

 

 

குறியாக் குறியினிற் கூடாத கூட்டத்

தறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய்

நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றுஞ்

செறியாச் செறிவே சிவமென லாமே.  4 

 

 

காலினில் ஊருங் கரும்பினில் கட்டியும்

பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்

பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை

காவலன் எங்குங் கலந்துநின் றானே.  5 

 

 

விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப்

பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல

இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்

நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே.  6 

 

 

நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து

வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள

எந்தைவந் தானென் றெழுந்தேன் எழுதலுஞ்

சிந்தையி லுள்ளே சிவனிருந் தானே.  7 

 

 

தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை

நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்

புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்

பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.  8 

 

 

தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது

தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே

படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை

கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.  9 

 

 

அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்

இவ்வழி தந்தை தாய் கேளியான் ஒக்குஞ்

செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும்

இவ்வழி நந்தி இயல்பது தானே.  10 

 

 

எறிவது ஞானத் துறைவாள் உருவி

அறிவது னோடேயவ் வாண்டகை யானைச்

செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப்

பறிவது பல்கணப் பற்றுவி டாரே.  11 

 

 

ஆதிப் பிரான்தந்த வாளங்கைக்கொண்டபின்

வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை

சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம்

ஆதிக்கட் டெய்வ மவனிவ னாமே.  12 

 

 

அந்தக் கருவை யருவை வினைசெய்தற்

பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச்

சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனை

சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே.  13 

 

 

உரையற்ற தொன்றை யுரைத்தான் எனக்குக்

கரையற் றெழுந்த கலைவேட் டறுத்துத்

திரையொத்த என்னுடல் நீங்கா திருத்திப்

புரையற்ற என்னுட் புகுந்தற் பரனே. 14

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

நந்தீசர்
View Details
பெருமிழலைக் குறும்ப நாயனார்
View Details
இடியாப்ப சித்தர்
View Details