பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 40. அவா அறுத்தல்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

வாசியும் ஊசியும் பேசி வகையினால்

பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை

ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்

ஈசன் இருந்த இடம் எளிதாமே.  1 

 

 

மாடத்து ளானலன் மண்டபத் தானலன்

கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்

வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்

மூடத்து ளேநின்று முத்திதந் தானே.  2 

 

 

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்

ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்

ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்

ஆசை விடவிட ஆனந்த மாமே.  3 

 

 

அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே

படுவழி செய்கின்ற பற்றற வீசி

விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்

தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே.  4 

 

 

உவாக்கடல் ஒக்கின்ற வூழியும் போன

துவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர்

அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர்

தவாக்கடல் ஈசன் தரித்து நின்றானே.  5 

 

 

நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்

துன்தொழி லற்றுச் சுத்தம தாகலும்

பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்

துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.  6 

 

 

உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்

பெண்மயற் கெட்டறப் பேறட்ட சித்தியாம்

திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்

வண்மை யருள்தான் அடைந்தபின்  ஆறுமே.  7 

 

 

அவனிவன் ஈசனென் றன்புற நாடிச்

சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார்

பவனிவன் பல்வகை யாமிப் பிறவி

புவனிவன் போவது பொய்கண்ட போதே.  8 

 

 

கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும்

பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும்

விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்

நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே.  9 

 

 

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்

கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்

சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்

முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.  10

திருச்சிற்றம்பலம்