பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 30. புறங்கூறாமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பிறையுள் கிடந்த முயலை எறிவான்

அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்

கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்

நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே.  1 

 

 

கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்

கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க

பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே

அருந்தா அலைகடல் ஆறுசென் றாலே.  2 

 

 

கருதலர் மாளக் கருவாயில் நின்ற

பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை

மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்

தருவலர் கேட்ட தனியும்ப ராமே.  3 

 

 

பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும்

இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில்

கணம்பதி னெட்டும் கழலடி காண

வணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே.  4 

 

 

என்னிலும் என்னுயி ராய இறைவனைப்

பொன்னிலும் மாமணி யாய புனிதனை

மின்னிய எவ்வுயி ராய விகிர் தனை

உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே.  5 

 

 

நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை

ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும்

வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுத்து

ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே.  6 

 

 

நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்

எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்

பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை

விண்அறி வாளர் விரும்புகின் றாரே.  7 

 

 

விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக்

கண்ணற வுள்ளே கருதிடிற் காலையில்

எண்உற வாகமுப் போதும் இயற்றிநீ

பண்ணிடில் தன்மை பராபர னாமே.  8 

 

 

ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்

பின்தான் அருள்செய்த பேரருளாளவன்

கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்

பொன்றாத போது புனைபுக ழானே.  9 

 

 

போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி

ஏற்றியே சென்றும் எறிமணி தான்அகக்

காற்றின் விளக்கது காயம் மயக்குறு

மாற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.  10 

 

 

நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை

ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை

கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண்

மூடிக்கண் டேனுல கேழுங்கண் டேனே.  11 

 

 

ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந்

தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுகண்

டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு

வானகஞ் செய்யு மறவனு மாமே.  12 

 

 

மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்

தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந்

தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக்

காமல மற்றார் அமைவுபெற் றாரே.  13 

 

 

பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்

டிதமுற்ற பாச இருளைத் துரந்து

மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே

திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே.  14 

 

 

சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்

சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்

முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்

சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.  15

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

வன்னி மரம்ரூபவ் கிணறுரூபவ் சிவலிங்கம் சாட்சி
View Details
இயற்பகை நாயனார்
View Details
அந்தணப் பெண்ணின் கொலையைக் கண்டுபிடித்தல்
View Details