பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 04. மத்திய சாக்கிர அவத்தை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி

சாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயை

சாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம்

சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே.  1 

 

 

மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்

நேய இராகாதி ஏய்ந்த துரியத்துத்

தோயும் சுழுமுனை கனாநனா வும்துன்னி

ஆயினன் அந்தச் சகலத்துஉ ளானே.  2 

 

 

மேவிய அந்த கண் விழிகண் குருடனாம்

ஆவயின் முன்அடிக் காணு மதுகண்டு

மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற

மூவயின் ஆன்மா முயலும் கருமமே.  3 

 

 

மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள்

ஒத்துஅங் கிருந்து உயிருண்ணு மாறுபோல்

அத்தனும் ஐம்பொறி ஆடகத்துள் நின்று

சத்த முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே.  4 

 

 

வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சும்

உச்சம் உடன்அணை வான்ஒரு வன்உளன்

பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று

நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே.  5 

 

 

நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன்

வேறான ஐ ஐந்து மெய்ப்புரு டன்பரன்

கூறா வியோமம் பரம்எனக் கொண்டனன்

வேறான நாலேழு வேதாந்த தத்துவமே.  6 

 

 

ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை

கோலங்கொண்டு ஆங்கே குணத்தினுடன் புக்கு

மூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும்

காலங்கொண் டான்அடி காணலும் ஆமே.  7 

 

 

நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்

ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடும்

கூடிய காமம் குளிக்கும் இரதமும்

நாடிய நல்ல மனமும் உடலிலே.  8 

 

 

ஆவன ஆக அழிவ அழிவன

போவன போவ புகுவ புகுவன

காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்

ஏவன செய்யும் இலங்கிழை யோனே.  9 

 

 

பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்

உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்

மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்

தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே.  10 

 

 

விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒன்பான்

தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால்

வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து

விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே.  11 

 

 

நாலொரு கோடியே நாற்பத்தொண் ணாயிரம்

மேலுமோர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்

பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவை

கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே.  12 

 

 

ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர்

ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்

ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு

ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே.  13 

 

 

தத்துவ மானது தன்வழி நின்றிடில்

வித்தக னாகி விளங்கி யிருக்கலாம்

பொய்த்துவ மாம்அவை போயிடும் அவ்வழி

தத்துவம் ஆவது அகார எழுத்தே.  14 

 

 

அறிவொன் றிலாதன ஐஏழும் ஒன்றும்

அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்

அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்தி

அறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே.  15 

 

 

சாக்கிர சாக்கிர மாதி தனில்ஐந்தும்

ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி

போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறு

நீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே.  16 

 

 

ஆணவ மாதி மலம்ஐந்து அலரோனுக்கு

ஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்கு

ஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்ப

ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே.  17 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

கல்லுளிச் சித்தர்
View Details
வணிகர் சிறுவனுக்காக வழக்காடுதல்
View Details
கலிய நாயனார்
View Details