பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்

வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன

பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து

இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே.  1 

 

 

கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம்

அடக்க லுறும் அவன்தானே அமரன்

விடக்கிரண்டு இன்புற மேவுறு சிந்தை

நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே.  2 

 

 

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை

அஞ்சும் அடக்கில் அசேதன மாம்என்றிட்டு

அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.  3 

 

 

முழக்கி எழுவன மும்மத வேழம்

அடக்க அறிவென்னும் தோட்டியை வைத்தேன்

பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்

கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.  4 

 

 

ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது

ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது

ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது

ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.  5 

 

 

பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்

விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்

பெருக்கிற் பெருக்கும் சுருக்கிற் சுருக்கும்

அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.  6 

 

 

இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்த

கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன்

தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத்

துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே.  7 

 

 

பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி

சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு

வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்

வேய்ந்துகொள் மேலை விதியது தானே.  8 

 

 

நடக்கின்ற நந்தியை நாடோ றும் உன்னில்

படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக்

குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்

வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே.  9 

 

 

சென்றன நாழிகை நாள்கள் சிலபல

நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து

வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்

குன்று விழவதில் தாங்கலும் ஆமே.  10 

 

 

போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்

போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால்

நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை

ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே.  11 

 

 

தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே

அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்

சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்

வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே.  12 

 

 

கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள்

எய்தி அவனை இசையினால் ஏத்துமின்

ஐவருடைய அவாவினில் தோன்றிய

பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே.  13 

 

திருச்சிற்றம்பலம்