பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 12. குருபூசை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப்

போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும்

ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல்

போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.  1 

 

 

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்

வானுற மாமலர் இட்டு வணங்கினும்

ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது

தேனமர் புங்குழல் சேரஒண் ணாதே.  2 

 

 

மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்

ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை

ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்

சேவடி சேரல் செயலறல் தானே.  3 

 

 

உச்சியும் காலையும் மாலையும் ஈசனை

நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை

விச்சிமின் விச்சி விரிசுடர் மூன்றினும்

நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே.  4 

 

 

புண்ணிய மண்டலம் பூசைநூ றாகுமாம்

பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம்

எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால்

பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே.  5 

 

 

இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை

வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்

இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை

வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.  6 

 

 

இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர்

விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தே

சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு

நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.  7 

 

 

மனபவ னங்களை மூலத்தான் மாற்றி

அனித உடல்பூத மாக்கி அகற்றிப்

புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத்

தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே.  8 

 

 

பகலும் இரவும் பயில்கின்ற பூசை

இயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப்

பகலும் இரவும் பயிலாத பூசை

சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே.  9 

 

 

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து

பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகி

இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து

இராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே.  10 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

ஸ்ரீ வல்லப சித்தர் (சுந்தரானந்ததேவர்)
View Details
சத்தி நாயனார்
View Details
பொற்கிழி அளித்தல்
View Details